பீஹாரில் ஜன் சுராஜ் நிர்வாகி கொலை: ஆளுங்கட்சி வேட்பாளர் அதிரடி கைது
பீஹாரில் ஜன் சுராஜ் நிர்வாகி கொலை: ஆளுங்கட்சி வேட்பாளர் அதிரடி கைது
ADDED : நவ 02, 2025 11:56 PM

பாட்னா: பீஹாரில், ஜன் சுராஜ் கட்சி நிர்வாகி துலர் சந்த் யாதவ் கொல்லப்பட்ட வழக்கில், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பிரபல தாதாவுமான அனந்த் சிங், 58, கைது செய்யப்பட்டார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கு சில தினங்களே உள்ள நிலையில் பிரசாரம் களை கட்டி உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய, 'மஹாகட்பந்தன்' கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
தலைநகர் பாட்னாவில் உள்ள மோகமா சட்டசபை தொகுதியில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பிரபல தாதாவுமான அனந்த் சிங் போட்டியிடுகிறார். இவரது மனைவி நீலம் தேவி, இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ., ஆவார்.
அனந்த் சிங்கை எதிர்த்து ஜன் சுராஜ் சார்பில், பிரியதர்ஷி பியுஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, மோகமா தொகுதியில் ஜன் சுராஜ் நிர்வாகி துலர் சந்த் யாதவ், கடந்த 30ல் பிரசாரம் செய்தார். அப்போது ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதலில், அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அனந்த் சி ங்குக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது .
இதை திட்டவட்டமாக மறுத்த அவர், 'துலர் சந்த் யாதவ் கொல்லப்பட்ட நேரத்தில், நான் அந்த இடத்திலேயே இல்லை. இச்சம்பவத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
'மோகமா தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரீய ஜனதா தள வேட்பாளர் வீணா தேவியின் கணவர் சூரஜ் பான், இந்த கொலையை செய்திருக்கலாம். எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த அவர் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம்' என்றார்.
இந்நிலையில், ஜன் சுராஜ் நிர்வாகி துலர் சந்த் யாதவ் கொலை தொடர்பாக, மோகமா தொகுதியின் ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும், பிரபல தாதாவுமான அனந்த் சிங்கை, பார் பகுதியில் உள்ள அவரது வீட்டில், நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரது உதவியாளர்கள் மாணிகந்த் தாக்குர், ரஞ்சித் ராம் ஆகியோரும் கைது செ ய்யப்பட்டனர்.
கடும் நடவடிக்கை! பீஹாரில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் சந்தி சிரிக்கிறது. இதற்கு, வரும் 14ல் முடிவு கட்டப்படும். தாதா, ரவுடிகளுக்கு தே.ஜ., கூட்டணி அடைக்கலம் கொடுக்கிறது. எங்கள் கூட்டணி அரசு அமைந்ததும், ஜாதி, மத பேதமின்றி அனைத்து குற்றவாளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
கற்பனை உலகில்! தே.ஜ., கூட்டணி யாருக்கும் அடைக்கலம் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்திருந்தால், அனந்த் சிங் கைது நடவடிக்கை நடந்திருக்காது. துலர் சந்த் யாதவ் கொலை சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் ஆவேன் என, கற்பனை உலகில் தேஜஸ்வி யாதவ் வாழ்கிறார். சிராக் பஸ்வான், மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி

