பாக்., மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு தனித்தனி ஜெயில்; அதிகாரிகள் போட்ட உத்தரவு
பாக்., மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு தனித்தனி ஜெயில்; அதிகாரிகள் போட்ட உத்தரவு
ADDED : நவ 20, 2025 11:24 AM

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகளை வெவ்வேறு சிறைகளில் அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
டில்லி செங்கோட்டை அருகே நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி மக்கள் 12 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய உமர் நபி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவன். மேலும், காஷ்மீரைச் சேர்ந்த பலரும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. மேலும், இந்தியாவில் மீண்டும் தொடர் தாக்குதல்களை நடத்த தங்கள் ஆதரவாளர்களிடம் நன்கொடை வசூலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கும்பல், வரும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று டில்லியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்த மிகப்பெரிய சதி திட்டம் தீட்டியிருந்தது விசாரணையில் தெரிந்தது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகளை வெவ்வேறு சிறைகளில் அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தியாவில் இணைந்து தாக்குதலை நடத்த திட்டமிடுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்வதையும், சதித்திட்டங்களை தீட்டுவதையும் தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், காஷ்மீர் பயங்கரவாதிகளை தங்கள் வலையில் சிக்கவைக்கும் சாத்தியக்கூறுகளை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

