டில்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் தகவல்
டில்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் தகவல்
UPDATED : நவ 11, 2025 12:00 PM
ADDED : நவ 11, 2025 11:41 AM

புதுடில்லி: டில்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என டில்லி போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் நம் பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, போஸ்டர்களை ஒட்டிய டாக்டர் அடில் அகமது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு - காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீல் கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.
இது தவிர வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரிக் வயர்கள், பேட்டரிகள், மெட்டல் ஷீட்கள், வெடிகுண்டு தயாரிப்பை விளக்கும் குறிப்பேடுகள் ஆகியவையும் சிக்கின. இந்நிலையில் நேற்று தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.
2 பேர் கைது
இதில், 12 பேர் உயிரிழந்தனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில், பரிதாபாத்தில் இருந்து செயல்பட்டு வந்த தனது கூட்டாளிகள் போலீசாரிடம் சிக்கியதால், பயங்கரவாத அமைப்பை சேர்ந்த புல்வாமா டாக்டர் உமர் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தியது டில்லி போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாதி உமர் வீட்டில் இருந்து செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இது குறித்து டில்லி போலீசார் கூறியதாவது: இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று தெரிகிறது. விசாரணையில் சந்தேக நபரின் நோக்கம் தெரியவந்துள்ளது.
பரிதாபாத்தில் பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டது தெரிந்தவுடன் அவர் தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிட்டார். குண்டுவெடிப்புக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைக் கண்டறிய அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
அமித்ஷா ஆலோசனை
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் மற்றும் டில்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் டிஜிபியும் இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்து கொண்டார்.
மவுன அஞ்சலி
டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுப்ரீம்கோர்ட்டில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

