தேசிய நெடுஞ்சாலை உணவகங்களை கணக்கெடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தேசிய நெடுஞ்சாலை உணவகங்களை கணக்கெடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
UPDATED : நவ 11, 2025 06:07 AM
ADDED : நவ 11, 2025 03:00 AM

தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை உணவகங்கள் இருக்கின்றன என்பதை கணக்கெடுத்து, இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2ம் தேதி, நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த வேன் மோதியதில், 18 பேர் உயிரிழந்தனர்.
விபத்துகள் தெலுங்கானாவில் கடந்த 3ம் தேதி, அரசு பஸ் - சரக்கு லாரி மோதிக்கொண்ட விபத்தில், 20 பேர் உயிரிழந்தனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் இதுபோன்ற விபத்துகள் குறித்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அங்கீகரிக்கப்படாத ஏராளமான உணவகங்கள் செயல்படுகின்றன. லாரி ஓட்டுநர்கள், சாலையிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு உணவகங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால், பின்னால் வரும் வாகனங்கள் லாரி மீது மோதி விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துள்ளன. இதை எப்படி சரிசெய்வது என்பதை தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.
விதிமுறைகள் தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை உணவகங்கள் இருக்கின்றன.
அவற்றில் அங்கீகரிக்கப்படாதது எத்தனை என்பது உள்ளிட்ட விபரங்களை, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கணக்கெடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தரமான சாலைகள் இல்லாவிட்டாலும் சுங்கக் கட்டண வசூல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே, நெடுஞ்சாலை பராமரிப்பு தொடர்பான ஒப்பந்ததாரர்களின் விதிமுறைகளையும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள மாநிலங்களின் தலைமைச் செயலர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தை, வழக்கின் ஒரு தரப்பாக சேர்க்கிறோம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -

