கரூர் சம்பவத்தில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு: தலைவர்கள் சொல்வது என்ன?
கரூர் சம்பவத்தில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு: தலைவர்கள் சொல்வது என்ன?
UPDATED : அக் 13, 2025 03:33 PM
ADDED : அக் 13, 2025 02:29 PM

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
மத்திய அமைச்சர், எல்.முருகன்
கரூர் உயிர் பலி சம்பவத்தில் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றாத திமுக அரசு தவெகவுக்கு எதிராக வன்ம பிரசாரம் செய்து வருகிறது. திமுக அரசின் விசாரணையில் உரிய நீதி கிடைக்குமா என்ற கவலை அனைவருக்கும் இருந்தது.
இந்த வழக்கில் தற்போது திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது. கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
இதன் மூலம் கரூர் கொடூர சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்; சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர், இபிஎஸ்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை என்ற அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற உத்தரவை அதிமுக வரவேற்கிறது.
தமிழக பாஜ தலைவர், நயினார் நாகேந்திரன்
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்புப் குழுவையும் அமைத்துள்ள உச்சநீதிமன்றத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிறுவ, எதிர்தரப்பினரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்திற்குக் கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்திற்குப் பின்னால் ஏதோவொரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது. தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் கருணையின்றி தண்டிக்கப்படுவார்கள்.
பாமக தலைவர், அன்புமணி
கரூர் விபத்தின் பின்னணியில் பல்வேறு சதி வலைகள் இருப்பதாக ஐயங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்.
விசாரணைக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டும் தான் உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பங்களுக்கு நீதியை வென்றெடுத்துக் கொடுக்கும்.
நாம் தமிழர் கட்சி, சீமான்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை என்பதை நாங்கள் ஏற்பதில்லை. ஏனென்றால் அது மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிரானது. காவல்துறை, நீதிமன்றம், வருமானவரித்துறை இவையெல்லாம் தன்னாட்சி சுதந்திரம் பெற்ற அமைப்புகள் என்று கூறுகின்றனர். ஆனால் அப்படி இல்லை ஆட்சியாளர்களின் கைவிரல்களாக தான் இருக்கிறது.
தவெக, ஆதவ் அர்ஜூனா
நாமக்கல் பிரசாரத்தை முடித்துவிட்டு கரூருக்குள் நுழைந்த போது, கரூர் போலீசார் தான் எங்களை வரவேற்றனர். இது எந்த மாவட்டத்திலும் நடக்காதது. கூட்ட நெரிசல் நடந்த இடத்தை எந்தளவிற்கு கட்டாயமாக எங்களுக்கு கொடுத்தார்கள் என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவிப்போம்.