பிள்ளை வரம் கேட்டு காத்திருக்கும் தம்பதியர்: தத்தெடுக்கும் நடைமுறையில் தொடர்கிறது தாமதம்
பிள்ளை வரம் கேட்டு காத்திருக்கும் தம்பதியர்: தத்தெடுக்கும் நடைமுறையில் தொடர்கிறது தாமதம்
UPDATED : நவ 17, 2025 12:47 AM
ADDED : நவ 17, 2025 12:46 AM

: குழந்தையின்மை என்ற மன அழுத்தத்தில் தவிக்கும் தம்பதியருக்கு, நம் நாட்டில் உள்ள தத்தெடுக்கும் நடைமுறைகளும், ஆண்டுக்கணக்கில் தொடரும் தாமதமும், மேலும் அழுத்தத்தை அதிகரிக்கின்றன. சட்டவிரோத தத்தெடுப்பு குற்றங்களுக்கும் இது முக்கிய காரணமாகி உள்ளது.
நம் நாட்டில், 'காரா' எனப்படும் மத்திய தத் தெடுப்பு வள ஆணையம், தத்தெடுப்பு செயல்பாடுகளை விதிமுறைகளின்படி மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், இந்த அமைப்பால் ஏற்படும் காலதாமதத்தை குறைக்க, கட்டாயம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அவசியம் என்கின்றனர், குழந்தைக்காக காத்திருக்கும் பெற்றோர்.
மத்திய தத்தெடுப்பு வள ஆணைய புள்ளிவிபரங்களின்படி, தேசிய அளவில் 65,000 பேர் விண்ணப்பித்து, குழந்தைகளுக்காக காத்திருக்கின்றனர்.
கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா கூறியதாவது:
தத்தெடுக்க விரும்புபவர்கள், காராவின் ஆன்லைன் போர்டலில் விண்ணப்பிக்க வேண்டும்; அடையாள அட்டை, திருமண சான்று, மருத்துவ சான்று உள்ளிட்ட 11 சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் விதிமுறைகளின்படி மேட்சிங் செய்து, காத்திருப்பு காலத்திற்கு பின், குழந்தை எங்குள்ளதோ அங்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும்.
கோவையில் கிணத்துக்கடவு பகுதியில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்சி உள்ளது.
மாதந்தோறும், 4 - 5 குழந்தைகளை தத்தெடுப்பு விதிமுறைகளின்படிகொடுக்கிறோம். இங்கு நேரடியாகச் சென்று, விரும்பிய குழந்தையை பார்த்து எடுத்துக்கொள்ள முடியாது.
தத்தெடுப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே இருந்தாலும், காத்திருப்பு காலம் இருப்பதால், சட்ட விரோதமாக கைமாற்றும் செயல்பாடுகள் நடக்கின்றன.

இதற்கும், எப். ஐ.ஆர்., பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறோம்.
அதிக புகார்கள் வருகின்றன; குழந்தையை தத்தெடுக்க விரும்புபவர்கள், விதிமுறைகளை பின்பற்றுவதே எதிர்காலத்தில் எந்த சிக்கல்களும் வராமல் தவிர்க்க முடியும்.
ஒரு குழந்தையை தத்தெடுக்கும் செயல்பாடுகளுக்கு, 2 - 3 ஆண்டுகள் ஆகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

