வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடைபெறவில்லை : சொல்கிறார் வடக்கு மண்டல ஐஜி
வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடைபெறவில்லை : சொல்கிறார் வடக்கு மண்டல ஐஜி
UPDATED : டிச 30, 2025 04:59 PM
ADDED : டிச 30, 2025 04:50 PM

சென்னை: '' திருத்தணியில் வட மாநிலத்தவர் என்பதால் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்,'' என வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மஹாராஷ்டிரா இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: டிச., 27 ல் திருத்தணியில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. ரயிலில் வட மாநிலத்தவர் தாக்கப்பட்டார் எனக் கூறப்படுவது தவறு. முறைத்து பார்த்ததால் தகராறு ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர், புலம்பெயர் தொழிலாளி இல்லை அவர், 2 மாதங்களாக பல இடங்களுக்கு சென்றுள்ளார்.
சென்னையில் இருந்து திருத்தணிக்கு இளைஞர் சென்ற நேரத்தில் 4 சிறுவர்கள் உடன் இருந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் நேற்று முன்தினம்( டிச.,28) கைது செய்யப்பட்டனர்.
தாக்குதலுக்கு உள்ளானவர் நலமுடன் உள்ளார். சொந்த ஊருக்கு செல்லும் போது தாக்குதல் நடந்துள்ளது. சிறுவர்களிடம் இருந்து 2 பட்டாக்கத்தி, மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வலுக்கட்டாயமாக ரயிலில் இருந்து இறக்கிவிட்டு, பட்டாக்கத்தியால் தாக்கி அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளானவர் நலமுடன் உள்ளார். அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் சிறுவர்கள் மீது அதிகபட்ச தண்டனை கிடைக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் 109 வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயிலில் இருந்த 4 சிறுவர்களில் 3 பேர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவரை நீதிபதியின் அறிவுரைப்படி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்.
முதற்கட்ட விசாரணையில் சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை.அவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தினாரா என விசாரணை நடந்து வருகிறது. ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ கஞ்சா கடந்த 6 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்டது. 10 மாத்திரை பிடிபட்டாலும் மெயின் சப்ளையரை தேடி செல்வோம்.
போதைப்பொருள் பயன்படுத்துவதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.சமூக ஊடகங்களில் வரும் ரீல்ஸ்களை கண்காணித்து வருகிறோம். இந்த நிகழ்வு தான் வெளியே தெரிய வருகிறது. ரீல்ஸ் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது தொடர்பாக ஏராளமான எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கி அவர்களை அனுப்பி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

