காங்கிரஸ் போராட்டத்துக்கும் இண்டி கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா
காங்கிரஸ் போராட்டத்துக்கும் இண்டி கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா
UPDATED : டிச 15, 2025 04:55 PM
ADDED : டிச 15, 2025 04:50 PM

ஸ்ரீநகர்: ' ஓட்டுத் திருட்டு' குறித்து காங்கிரஸ் நடத்தும் போராட்டத்துக்கும், இண்டி கூட்டணிக்கும் எந்தத் தொடர்புமில்லை, என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், டில்லியில் நடந்த மாநாட்டில் பேசிய, தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், காஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லா,' இண்டி கூட்டணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை ஆதரவின் மூலமாகவே கூட்டணி இன்னும் உயிர்ப்புடன் உள்ளது ' எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் உமர் அப்துல்லா அளித்த பேட்டியில் கூறியதாவது:ஓட்டுத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் நடத்தும் போராட்டத்துக்கும் இண்டி கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அஜென்டா உள்ளது. எஸ்ஐஆர் மற்றும் ஓட்டுத் திருட்டு ஆகியவற்றை காங்கிரஸ் முக்கியமான விஷயமாக தேர்வு செய்துள்ளது. என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்கு சொல்ல நாங்கள் யார்? அவர்களுக்கான பிரச்னையை அவர்கள் செய்வார்கள். எங்களுக்கான பிரச்னையை நாங்கள் தேர்வு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.காங்கிரஸ் எம்பி ராகுல் ஓட்டுத் திருட்டு குறித்து நீண்ட காலமாக பாஜவையும், தேர்தல் கமிஷனையும் குற்றம்சாட்டி வந்தார். டில்லியில் நேற்று காங்கிரஸ் சார்பில் பேரணி மற்றும் போராட்டம் நடந்தது. டில்லியில் நடந்த போராட்டத்தில் ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், இது அவர்களின் சொந்த பிரச்னை என உமர் அப்துல்லா பேட்டி கொடுத்துள்ளார்.

