நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!
நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!
ADDED : டிச 25, 2025 06:49 AM

சென்னை: தமிழகத்தில், பல்வேறு ஊர்களிலும், லஞ்சம் வாங்கிய வேளாண் அதிகாரி, வி.ஏ.ஓ., உள்ளிட்ட 5 பேர் நேற்று(டிச.,24) கைது செய்யப்பட்டனர்.
பி.டி.ஓ., பஞ்., செயலர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் வெங்கடேசன், 56; இவர், தன் மனைவி பெயரில், மருதண்டப்பள்ளியில் வாங்கிய, 53 சென்ட் இடத்திற்கு செல்ல அணுகு சாலை சான்று கேட்டு, சூளகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தார். சான்று வழங்க பி.டி.ஓ., கார்த்திக்குமார், 43, மருதண்டப்பள்ளி பஞ்., செயலர் ராஜேந்திரன், 37, ஆகியோர், 60,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். வெங்கடேசன் புகாரில், கார்த்திக்குமார், ராஜேந்திரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
லஞ்ச வி.ஏ.ஓ., சிக்கினார்
சேலம்: சேலம் மாவட்டம், வித்யா நகரை சேர்ந்தவர் பாலாஜி, 45; சின்னத்திரை துணை நடிகர். இவரது பெரியம்மா, அக்காவுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் பாலாஜி விண்ணப்பித்தார். அந்த மனு குறித்து விசாரிக்க, பெரியேரி வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு சென்ற பாலாஜியிடம், வி.ஏ.ஓ.,வான பெரமனுாரை சேர்ந்த ராஜசேகர், 45, என்பவர், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பாலாஜியிடம், 2,000 ரூபாயை, ராஜசேகர் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர்.
ரூ.3,000 லஞ்சம் பெற்றவருக்கு 'காப்பு'
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வி.கள்ளுப்பட்டியை சேர்ந்தவர் பொறியாளர் பிரியதர்ஷன், 30; கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்காக, 2024 ஜூலையில் விண்ணப்பித்தார். விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவருக்கு உதவித்தொகை, 8 கிராம் தங்கம் வழங்கப்பட உள்ளது. பிரியதர்ஷன் உரிய ஆவணங்களுடன் சமூகநல விரிவாக்க அலுவலர் உமாராணியை அணுகியபோது, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பிரியதர்ஷன் புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் உமாராணியை கைது செய்தனர்.
வேளாண் அதிகாரி கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பிலாத்து ஆண்டிக்குளத்தை சேர்ந்த விவசாயி கருப்பையா, 60. இவருக்கு பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில், இரு ஆண்டுகளாக பணம் வரவில்லை. வட மதுரை உதவி வேளாண் அலுவலர் சந்திரலேகா, 39, என்பவரிடம் புகார் செய்தார். ஆன்லைனில் பதிவு செய்து தர, சந்திரலேகா 2,500 ரூபாயை, கருப்பையாவிடம் லஞ்சமாக கேட்டார். கருப்பையா புகாரில், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் பெற்ற சந்திரலேகாவை கைது செய்தனர்.
ரூ.5,000 கேட்ட வி.ஏ.ஓ., கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், முன்னுாரை சேர்ந்தவர் சுரேந்தர், ஆட்டோ ஓட்டுநர். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். சில மாதங்களுக்கு முன் ஆலங்குப்பத்தில், தன் மனைவி பெயரில், வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் விண்ணப்பம் செய்திருந்தார். ஆலங்குப்பம் வி.ஏ.ஓ., சரவணன், சுரேந்தரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். சுரேந்தரிடம் இருந்து, பணத்தை சரவணன் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.

