கர்நாடகா வனத்துறை என்கவுன்டர்; வேட்டை கும்பலில் மூவர் உயிரிழப்பு
கர்நாடகா வனத்துறை என்கவுன்டர்; வேட்டை கும்பலில் மூவர் உயிரிழப்பு
ADDED : ஆக 15, 2026 04:51 PM

சாம்ராஜநகர்: கர்நாடகாவின் வனப்பகுதியில் சட்டவிரோதமாக வேட்டையாடச் சென்ற 3 பேரை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
சாமராஜநகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஹனுர் வனப்பகுதியில் உள்ள ஷாக்யா அருகே நேற்று இரவு சிலர் சட்டவிரோதமாக வேட்டைக்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு மானை வேட்டையாடிய அந்தக் கும்பல், அதனை பங்கு பிரிக்கும் போது, அந்தப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர்.
இதனைக் கண்ட அந்தக் கும்பல் வனத்துறையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு வனத்துறையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஒருவர் தப்பியோடிய நிலையில், 3 பேர் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த பொருட்களை வெளியே வீசியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை அலுவலகத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
