த.வெ.க.,வுக்கு தாவிய மகன்; தர்மசங்கடத்தில் 'மாஜி' சபாநாயகர்
த.வெ.க.,வுக்கு தாவிய மகன்; தர்மசங்கடத்தில் 'மாஜி' சபாநாயகர்
UPDATED : பிப் 25, 2026 02:46 PM
ADDED : பிப் 25, 2026 04:41 AM

திருப்பூர்: அவிநாசி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் சபாநாயகருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், த.வெ.க.,வில் இணைந்ததால், தனபால் கடும் தர்மசங்கடத்தில் இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறினர்.
அவிநாசி தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக முன்னாள் சபாநாயகர் தனபால் இருந்து வருகிறார். கடந்த 1977, 1980, 1984, 2001 தேர்தல்களில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001ல், அமைச்சராக இருந்தார். பின், ஜெயலலிதா ஆட்சியில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2016 மற்றும், 2021 தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது, ஏழாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க., - ஐ.டி., அணியில் இருந்தார்.
கடந்த லோக்சபா தேர்தலில், நீலகிரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு மூன்றாமிடம் பெற்று தோல்வியடைந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து லோகேஷ் விலகி, த.வெ.க.,வில் இணைந்துள்ளார். இது, தனபாலுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனபால் கூறியதாவது: ஏழு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை மற்றும் வீட்டில் இருந்தேன். கட்சியில் இருந்து யாரும் வந்து என்னை பார்க்கவில்லை. அந்த கோபத்தில் என் மகன் கட்சி மாறி விட்டார். அது எனக்கு சங்கடம் தான்.
கடந்த, 2017ல், நான் சபாநாயகராக இருந்த போது, நான் தான், அ.தி.மு.க., அரசை காப்பாற்றிக் கொடுத்தேன். அ.தி.மு.க., விசுவாசியாகவே இருப்பேன். கட்சி மாறும் எண்ணம் எனக்கு இல்லை. வரும் தேர்தலில் 'சீட்' கேட்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

