ஒரே வாரத்தில் ஈரான் வான்வெளியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவோம்; அமெரிக்கா அறிவிப்பு
ஒரே வாரத்தில் ஈரான் வான்வெளியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவோம்; அமெரிக்கா அறிவிப்பு
ADDED : மார் 04, 2026 07:58 PM

வாஷிங்டன்; ஈரான் வான்வெளியை அமெரிக்கா, இஸ்ரேல் ஒரே வாரத்தில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவோம் என்று அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத் கூறி உள்ளார்.
ஈரானின் முக்கிய பகுதிகளில் அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் 5வது நாளை எட்டி உள்ளது. இருதரப்பிலும் தாக்குதல்கள் ஓயாத நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது. பேச்சுவார்த்தையை இருநாடுகளும் மேற்கொள்ள வேண்டும் பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
ஆனால் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை போன்ற சூழல்களுக்கான வாய்ப்புகள் காணப்படாத நிலையில், அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத் நிருபர்களிடம் கூறியதாவது;
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தீர்க்கமாக நிச்சயமாக கருணையில்லாத வெற்றியை பெறும். அமெரிக்கா மட்டுமே இதற்கு தலைமை தாங்க முடியும்.
தாக்குதலில் இருந்து கிடைத்த முடிவுகள், வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. மத்திய கிழக்கு பகுதிக்கு அதிக வீரர்களும், குண்டுவீசும் விமானங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு வாரத்திற்குள் ஈரான் வான்வெளியை அமெரிக்காவும், இஸ்ரேலும் முழுமையான கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிடும். போரில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டுள்ளது.
தற்போதைய தாக்குதலானது 2003ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட படையெடுப்பை விட இரண்டு மடங்கு சக்திவாய்ந்தது. அதை இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறோம்.
இவ்வாறு ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத் கூறினார்.

