தேவர் ஜெயந்தி; பசும்பொன்னில் துணை ஜனாதிபதி மரியாதை
தேவர் ஜெயந்தி; பசும்பொன்னில் துணை ஜனாதிபதி மரியாதை
UPDATED : அக் 30, 2025 12:50 PM
ADDED : அக் 30, 2025 09:23 AM

பசும்பொன்: முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும 63வது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, மதுரையில் இருந்து துணை ஜனாதிபதி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் சென்றார். அங்கு முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா ஆகியார் உடனிருந்தனர்.
பின்னர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், 'தனது ஜமீன் சொத்துக்களில் பெரும் பகுதியை பிற சமுதாயத்தினருக்கு வழங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். பற்றற்ற பண்பாளர் தேவர் திருமகனார். அவரைப் போற்றுவது தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றுவதாகும். நேதாஜியின் தளபதியாக திகழ்ந்தவர் வீரத்திருமகனார் முத்துராமலிங்க தேவர். சத்தியம், வாய்மையை கடைபிடித்தவர்,' என்று புகழாரம் சூட்டினார்.

அதேபோல, மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வீட்டுக்கு இன்று சென்ற துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், அங்குள்ள பூஜை அறையில் தியானம் செய்தார்.


பிரதமர் புகழாரம்
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில்; இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பார்லி., வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

