கல்யாண சமையல் சாதம்; கடற்கரை மணலில் பிரமாதம் 'பீச் வெட்டிங்' திட்டம் அறிமுகம்
கல்யாண சமையல் சாதம்; கடற்கரை மணலில் பிரமாதம் 'பீச் வெட்டிங்' திட்டம் அறிமுகம்
ADDED : மார் 08, 2026 12:26 AM

சென்னை: நடுத்தர மக்களும் கடற்கரையில் பிரமாண்டமாக திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில், 'பீச் வெட்டிங்' என்ற திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில், திருமண நிகழ்ச்சிகளுக்கு, ஆடம்பர மண்டபம், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களையே பிரதானமாக தேர்வு செய்கின்றனர். முக்கிய பிரமுகர்கள், பெரிய தொழிலதிபர்கள், கடற்கரை அருகில் உள்ள ரிசார்ட்களில், திருமண விழாக்களை நடத்துகின்றனர்.
பொதுவாக, இந்த ரிசார்ட்களில் திருமண விழா ஏற்பாடு செய்ய, லட்சக்கணக்கில் செலவாகும். இதன் காரணமாக, பீச் ரிசார்ட்டுகளில் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது, நடுத்தர மக்களுக்கு பெரிய கனவாகவே இருக்கிறது.
இந்நிலையில், கடற்கரையில் திருமண ஏற்பாடுகளை செய்யும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், 'பீச் வெட்டிங்' என்ற கடற்கரை கல்யாண திட்டத்தை, புதிதாக துவங்கி உள்ளது. அதன்படி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலக அனுமதியுடன், இனி கடற்கரையில் திருமணம் செய்து கொள்ள முடியும்.
இதுகுறித்து, தமிழக சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது, வெளிநாட்டு கலாசாரத்தில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுலா திட்டங்களை தவிர்த்து, கடற்கரை திருமணம் என்ற முறையை பலரும் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, 'பீச் வெட்டிங்' என்ற திட்டம், தற்போது துவக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தனியார் வாயிலாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், அரசு சார்பில் குறைந்த விலையில், இதில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
முதல் கட்டமாக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, மாமல்லபுரம் தமிழ்நாடு ஹோட்டல் ரிசார்ட்டில், இது செயல்பாட்டிற்கு வர உள்ளது. அங்குள்ள கடற்கரை மணல் வெளியில், திருமண நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தலாம். முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களை, www.ttdconline.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

