நியாயம் தலைதூக்கும் போது திமுகவின் ஒரே பதில் வன்முறை தான்: அண்ணாமலை விமர்சனம்
நியாயம் தலைதூக்கும் போது திமுகவின் ஒரே பதில் வன்முறை தான்: அண்ணாமலை விமர்சனம்
UPDATED : ஜன 10, 2026 07:07 AM
ADDED : ஜன 10, 2026 07:04 AM

சென்னை: டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜவினரை தாக்குவதற்காக ஆயுதங்களுடன் திமுகவினர் திரண்ட சம்பவத்திற்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; நியாயம் தலைதூக்கும் போது திமுகவின் ஒரே பதில் வன்முறை தான். தனியார் டிவி சார்பில் நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜ இளைஞரணி தலைவர் எஸ்ஜி சூர்யா மற்றும் பாஜவினரை தாக்குவதற்காக, பயங்கர ஆயுதங்கள் மற்றும் சோடா பாட்டில்களுடன் 100க்கும் மேற்பட்ட திமுக குண்டர்கள் திரண்டனர். அவர்கள் பாஜவினரை தாக்குவதற்கு உதவும் விதமாக, அப்பகுதியில் மின்விளக்குகள் வேண்டுமென்றே அணைக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.
இதுதான் திமுக ஆட்சியின் கீழ் தமிழகத்தில் நிலவும் மோசமான சட்டம் ஒழுங்கு சூழ்நிலை. குற்றம்புரிந்தவர்களை கைது செய்வதற்கு பதிலாக, திமுக குண்டர்களை காப்பாற்றவே போலீசார் அதிக நேரம் வேலை செய்கின்றனர்.
சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் கருத்து வேறுபாடுகள் வன்முறையால் ஒடுக்கப்பட்டதும், பயம் தெருக்களில் கோலோச்சியதும் போன்ற திமுகவின் இருண்ட நாட்களை இந்த நிகழ்வு நினைவுபடுத்துகிறது, இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார். அவரது அறிக்கை; சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜ இளைஞர் அணித் தலைவர் எஸ்ஜி சூர்யா மீதும், இளைஞர் அணி நிர்வாகிகள் மீதும் திமுக ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த நான்கரை வருடங்களாக திமுக ஆட்சியின் கோரமுகத்தைக் கண்ட தமிழக மக்களின் கடுங்கோபத்தை எண்ணி பயம் தொற்றிக் கொண்டதால், இதுபோன்ற வன்முறையினைக் கையில் எடுத்துள்ளனர் திமுகவினர். விவாதங்களில் மக்கள் பிரதிநிதியாகக் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு கூட வன்முறையையே பதிலாக அளிப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதற்குச் சமம். தமிழக முதல்வர் முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசாரின் இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

