UPDATED : மார் 01, 2026 07:19 AM
ADDED : மார் 01, 2026 07:13 AM

நமது நிருபர்
சர்வதேச தொழில் வர்த்தக தொடர்பு நகராக கருதப்படும் துபாயை ஈரான் தாக்குவதன் நோக்கம், அதன் பின்னணி பற்றிய ஒரு விரிவான அலசல்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் ஏவுகணை தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. குறிப்பாக பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தி இருக்கிறது. துப்பாயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
துபாயில் உள்ள பேர்மாண்ட் தி பாம் ஹோட்டலில் ஏவுகணை தாக்குதல் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் அடர்ந்த புகை மண்டலமாக காட்சி அளித்தது. பாம் ஜூமேரா பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல்கள் எங்கே?
துபாயில் பல இடங்களில் குறி வைத்து, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. பேர்மாண்ட் தி பாம் ஹோட்டல், துபாய் சர்வதேச விமான நிலையம், புர்ஜ் அல் அரப் மற்றும் ஜெபல் அலி துறைமுகம் ஆகியவை அடங்கும்.
இந்த தாக்குதல்கள் பல்வேறு இடங்களில் காயங்களையும், சிறிய சேதங்களையும் ஏற்படுத்தின. பெரும்பாலான இடங்களில் வானிலேயே ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துபாய் மீது தாக்குதல்
செல்வ வளம் மிகுந்த துபாய் நகரம், மேற்குலக நாடுகளுடன் போட்டியிட்டு உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாக மிளிர்கிறது. தொழில், வர்த்தகம், சுற்றுலா, நிதிச்சேவை, ரியல் எஸ்டேட் என அனைத்திலும் முன்னணியில் இருக்கிறது. உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் துபாயில் அலுவலகம் வைத்திருப்பதை பெருமையாக கருதுகின்றன.
அந்த அளவுக்கு சர்வதேச தொழில் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த நகராக துபாய் உள்ளது.இங்கு வசிக்கும் 40 லட்சம் பேரில், 92 சதவீதம் பேர் வெளிநாட்டினர். குறிப்பாக ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள். துபாய் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில், போரை நிறுத்துவதற்கு பல்வேறு தரப்பிலும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அழுத்தம் வரக்கூடும் என்ற நோக்கத்தில் ஈரான் இதை செய்வதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

