அதிகரிக்கிறது ஆன்லைன் மோசடி: 8 மாதத்தில் ரூ.73 கோடி போச்சு
அதிகரிக்கிறது ஆன்லைன் மோசடி: 8 மாதத்தில் ரூ.73 கோடி போச்சு
UPDATED : ஆக 31, 2024 06:27 AM
ADDED : ஆக 31, 2024 05:29 AM

கோவை: இந்தாண்டு துவக்கம் முதல் ஆக., மாதம் வரை 73 கோடி ரூபாயை கோவை மக்கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.
ஆன்லைன் வாயிலாக பண மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை கண்டறிவது, போலீசாருக்கும் சவாலாக உள்ளது. இணைய வழியில் பலர் தங்களின் பணத்தை இழக்கின்றனர்.
படிப்பறிவு, விழிப்புணர்வு இல்லாதவர்களிடம், 'ஏ.டி.எம்., கார்டு புதுபிக்க வேண்டும் என்பதில் தொடங்கி, ஆன்லைன் டிரேடிங், பெடெக்ஸ் என புது புது மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். போலீசார் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பலரின் பேராசை அவர்களை மோசடி வலையில் சிக்க வைக்கிறது. இந்நிலையில், கோவையை சேர்ந்த பலரிடம் ஆன்லைன் மோசடி கும்பல் பல கோடி ரூபாயை பறித்திருப்பது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன், ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஐ.டி., நிறுவன ஊழியரிடம் 1.63 கோடி ரூபாய் மோசடி செய்தனர். அதேபோல், ராமநாதபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம், சட்ட விரோத பார்சல் வந்துள்ளதாக கூறி, ரூ. 2.3 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவையில் கடந்த ஜன., முதல் ஆக., 26ம் தேதி வரை (எட்டு மாதங்களில்) சுமார், 73 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. மொத்தம், 5319 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 217 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு, 31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஆறு குற்றவாளிகள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. சுமார் எட்டு கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த எட்டு மாதங்களின் ஒன்றறை மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே, 2021ம் ஆண்டு ரூ.2.99 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது, 2,251 புகார்கள் பெறப்பட்டுள்ளன, 44 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. 2022ம் ஆண்டு சுமார் 4516 புகார்கள் பெறப்பட்டன, அதில் 13.87 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. 68 எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளது. 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 81 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு, 48 கோடியே 32 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. 6396 புகார்கள் வந்ததில் 206 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. 44 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு பேர் குண்டாசில் அடைக்கப்பட்டுள்ளனர். ரூ. 2.24 கோடி மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் நடந்த மோசடியை ஒப்பிடுகையில் ஒவ்வொரு ஆண்டும் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மேலும், மோசடிகளில் சிக்குவோர் பெரும்பாலும் படித்தவர்கள், ஐ.டி., உள்ளிட்ட துறைகளில் பணிபுரிவோர், மூத்த குடிமக்கள் ஆவர்.
இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டும் கும்பலிடம் ஏமாறாதீர்கள், உங்கள் பெயரில் சட்ட விரோத பார்சல் வந்துள்ளது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து பணம் அனுப்ப கேட்டால் பயப்படாமல் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது cybercrime.gov.in என்ற இணைய தளம் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.