இயற்கை விவசாயிகளை ஒன்றிணைக்க நடவடிக்கை: களமிறங்கிய கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்
இயற்கை விவசாயிகளை ஒன்றிணைக்க நடவடிக்கை: களமிறங்கிய கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்
ADDED : ஆக 23, 2024 05:23 AM

கோவை : இயற்கை விவசாயிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, செயலி மற்றும் இணையதளம் உருவாக்கும் பணி மேற்கொண்டு வருவதாக, கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு பேராசிரியராக கலந்து கொண்ட கனடா நாட்டு ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
கனடாவை சேர்ந்தவர், மலார்ட் அதான் ஜூலீஎன், மண் தன்மை மற்றும் இயற்கை பூச்சி மேலாண்மை குறித்த ஆராய்ச்சியாளர். இவர், கடந்த 2013-14ல், கோவை காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில், கறிவேப்பிலை தோட்டங்களில், பூச்சி மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பூச்சி மருந்து தெளிக்காமல், பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொண்டு வரும் இவர், தற்போது, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஒன்றிணைக்க, செயலி மற்றும் இணையதளம் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பூச்சிக்கொல்லி மருந்துகளால், மண் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், செடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளும் பாதிக்கப்படுகின்றன. நச்சு இல்லாத வயல்களில் சிலந்தி தான் அதிகம் இருக்கும்.
எனவே, இயற்கை விவசாயம் குறித்த முழு தரவுகள், மற்றொரு விவசாயிக்கு தேவை எனும் பட்சத்தில், அதை எவ்வித சிரமமும் இல்லாமல், மொபைல் போனிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில், செயலி மற்றும் இணையதளம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதற்கு அதிகளவு நிதி தேவைப்படும்.
இதற்காக, ஐ.நா., உட்பட பல நாட்டு அரசுகளிடம் விண்ணப்பித்துள்ளேன். நிதி கிடைத்தால், என் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

