திருமாவளவன் நடத்தும் மாநாட்டில் அ.தி.மு.க., - த.வெ.க., பங்கேற்பு?
திருமாவளவன் நடத்தும் மாநாட்டில் அ.தி.மு.க., - த.வெ.க., பங்கேற்பு?
ADDED : செப் 12, 2024 03:44 AM

மது ஒழிப்பு மாநாட்டுக்கு, அ.தி.மு.க., - த.வெ.க., தலைவர்களை அழைப்பது குறித்து, கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.
இம்மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க.,வுக்கு நேற்று முன்தினம் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.
விழுப்புரத்தில் நேற்று அவரை சந்தித்த நிருபர்கள், 'விஜய் தலைமையிலான த.வெ.க.,வை அழைப்பீர்களா' என, கேட்டனர்.
அதற்கு பதிலளித்த திருமாவளவன், ''விஜய்க்கும் மது ஒழிப்பில் உடன்பாடு இருக்கும். அவரும் கட்டாயம் பங்கேற்கலாம்,'' என்றார்.
இதுகுறித்து வி.சி., வட்டாரங்கள் கூறியதாவது:
அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரையும், த.வெ.க., சார்பில் மாநில நிர்வாகி ஒருவரையும், மது ஒழிப்பு மாநாட்டுக்கு அனுப்பி வைக்க அக்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய புள்ளி ஒருவரிடம், பழனிசாமியின் குடும்ப உறுப்பினரும், விஜய்க்கு நெருக்கமான தொழிலதிபரும் பேச்சு நடத்தியுள்ளனர்.
மாநாட்டு அழைப்பிதழில் அவர்கள் பெயரை அச்சிடுவது குறித்தும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுப்பது குறித்தும், கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டி ஆலோசிக்கலாம் என, திருமாவளவன் கூறியிருக்கிறார்.
இந்த வார இறுதிக்குள் உயர்மட்டக் குழு கூடி, இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும் என தெரிகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -