சிறிய பாட்டில்களில் தரமற்ற குளிர்பானங்கள்! உணவுப்பாதுகாப்பு துறை எச்சரிக்கை
சிறிய பாட்டில்களில் தரமற்ற குளிர்பானங்கள்! உணவுப்பாதுகாப்பு துறை எச்சரிக்கை
UPDATED : ஏப் 03, 2024 04:09 AM
ADDED : ஏப் 02, 2024 11:51 PM

வெயில் காலங்களில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட, தரமற்ற குளிர்பானங்களை குடிக்க வேண்டாம் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோடை வெயில், தகிக்கத் துவங்கியுள்ளது. வெயிலை சமாளிக்க குளிர்பானங்களை விரும்பி குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதைப்பயன்படுத்தி, சிறிய பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செயற்கை நிறமூட்டிகள், ரசாயனங்கள் உதவியுடன் தயாரிக்கப்படும் இந்த குளிர்பானங்களின் தரம் குறித்து கேள்வி எழுகிறது.
இதுபோன்ற ரசாயனங்கள் அடங்கிய குளிர்பானங்களை அருந்தும் போது, அதனால், உடல்நலக்குறைபாடு ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் டாக்டர்கள்.
மாம்பழக்கூழ் இருப்பதாக விற்பனை செய்யப்படும் குளிர்பானத்தில், சுத்தமான மாம்பழச்சாறு இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், மாம்பழ சீசன் அல்லாத நாட்களிலும், இவை சந்தையில் விற்கப்படுவது எப்படி என, மக்கள் சிந்திக்க வேண்டும். இதைக்கருத்தில் கொண்டு, இத்தகைய பாட்டில் குளிர்பானங்களை தவிர்க்க உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், ''பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் குறித்து, கவனமுடன் இருக்க வேண்டும். பாட்டில் குளிர்பானங்களில் அச்சிடப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் குறித்து அறிவது அவசியம். அதில் இயற்கையான பழங்கள் இருப்பது குறித்து அறிய வேண்டும்.
அவ்வாறு இல்லாமல், ரசாயன கலப்பு இருந்தால் தவிர்த்து விட வேண்டும். இதுகுறித்து ஆய்வு நடத்த உள்ளோம்.
''லேபிளிங் சட்டத்தை பின்பற்றாத நிறுவனங்கள் மீது, கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பொருட்களிலும் தயாரிப்பு, காலாவதி தேதி அச்சிடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்,'' என்றார்.
- நமது நிருபர் -

