ADDED : மார் 24, 2024 01:57 AM

அனைத்து கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. தமிழகத்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறது பா.ஜ., இந்த முறை எப்படியாவது பா.ஜ., கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது மோடியின் ஆசை.
இதையடுத்து, பா.ஜ., அமைச்சர்களின் பெருங்கூட்டமே தமிழகம் நோக்கி படையெடுக்க உள்ளது. யார் யார் எங்கு போக வேண்டும் என்பதை ஒரு பட்டியலிட்டு கொடுத்து விட்டாராம், பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டா.
கோவையில் நடைபெற்ற பேரணியால், மகிழ்ச்சியில் உள்ள மோடி, பிரசாரத்திற்காக நான்கு முறை தமிழகம் வரவுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் தமிழகத்தில் இருப்பார் என்கின்றனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வாரம் தங்கி பிரசாரம் செய்வார். மத்திய அமைச்சர்கள் 18 பேர் பிரசாரம் செய்ய தமிழகம் வருகின்றனர்.
இவர்களைத் தவிர, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வெளி மாநில முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே தமிழகத்தில் அமைதியாக பிரசாரத்தை துவங்கி விட்டனர். இவர்களுடைய பிரசாரம் வெளியே தெரியாமல் அமைதியாக நடைபெறும்.
காங்கிரசைப் பொறுத்தவரை பிரியங்கா இரண்டு முறையும், ராகுல் ஒரு முறையும் தமிழகம் வருவர் என, சொல்லப்படுகிறது. காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக பிரசாரத்திற்கு வர மாட்டார் என்கின்றனர்; காரணம் காவிரி, மேகதாது பிரச்னை.
இன்னொரு செய்தியும் டில்லியில் அடிபடுகிறது... தேர்தல் நாள் நெருங்கும் போது, நடிகர் ரஜினி, பிரதமர் மோடிக்கு ஆதரவாக அறிக்கை தருவார் என்கின்றனர். அரசியலை விட்டே வெளியேறிய அவர், பா.ஜ.,விற்கு வெளிப்படையாக அதரவு தருவாரா?

