ADDED : ஏப் 14, 2024 04:06 AM

மிகப்பெரும் நிலப்பரப்பு உள்ள நாட்டிலேயே மிகப்பெரும் தொகுதியான லடாக்குக்கு அடுத்த இடத்தில் உள்ள ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில், தகிக்கும் வெயிலைவிடக் கடுமையான அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.
இதற்கு முக்கியக் காரணம், 26 வயதாகும் பா.ஜ., அதிருப்தியாளர், சுயேச்சையாக போட்டியிடுவதுதான்.
ராஜஸ்தானில், 25 தொகுதிகளிலும் கடந்த இரண்டு தேர்தல்களில், பா.ஜ.,வே வென்று வந்துள்ளது. இங்குள்ள, 71,701 சதுர கி.மீ., பரப்புள்ள பார்மர் தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இங்கு பா.ஜ.,வின் சார்பில் மத்திய வேளாண் துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி, மீண்டும் போட்டியிடுகிறார்.
ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சியில் இருந்து சமீபத்தில் சேர்ந்தஉம்மேதரம் பெனிவாலை, காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
இந்த தொகுதியில், பா.ஜ.,வில் அதிருப்தி அடைந்து வெளியேறிய ரவீந்திர பட்டி, 26, சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஷியோ தொகுதியின் எம்.எல்.ஏ.,வான இவர், இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார். அவருடைய பிரசாரத்துக்கு, இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
இது பா.ஜ., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை திகைக்க வைத்துஉள்ளது. ஜாட், ராஜ்புத் மற்றும் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள இந்தத் தொகுதி, காங்கிரசின் கோட்டையாக இருந்தது.
இதுவரை நடந்துள்ள, 17 தேர்தல்களில், காங்கிரஸ் ஒன்பது முறை வென்றுள்ளது.
கர்னல் சோனா ராம் சவுத்ரி, இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மூன்று முறையும், பா.ஜ., சார்பில் ஒருமுறையும் வென்றுள்ளார்.
பா.ஜ.,வில் அதிருப்தியடைந்த முன்னாள் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், இங்கு சுயேச்சையாக போட்டியிட்டார். ஆனால், சோனா ராம் சவுத்ரியிடம் தோல்வியடைந்தார்.
இந்தத் தொகுதியில், 1952 மற்றும் 1957களில் நடந்த முதல் இரண்டு லோக்சபா தேர்தல்களில் சுயேச்சைகள் வென்றனர். அதன்பிறகு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வே வென்று வந்துள்ளன.
வரலாற்றை மாற்றி எழுதுவேன் என்று ரவீந்திர பட்டி கூறி வருகிறார். அவருக்கு இளைஞர்கள் அளித்து வரும் ஆதரவு, தேசியக் கட்சிகள் இரண்டுக்கும் பெரும் சவாலாக உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

