வார்டு மறுவரையறை அடிப்படையில் ஆவணங்களை மாற்றாததால் குழப்பம்!
வார்டு மறுவரையறை அடிப்படையில் ஆவணங்களை மாற்றாததால் குழப்பம்!
UPDATED : ஆக 07, 2024 06:05 AM
ADDED : ஆக 06, 2024 11:55 PM

வார்டு மறுவரையறை அடிப்படையில் ஆவணங்கள் மற்றும் 'ஆன்லைன்' சேவையில் மாற்றம் செய்யாததால், குடிநீர் வினியோகம், கழிவுநீர் பிரச்னைகள் குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
சென்னை குடிநீர் வாரியத்தில், 13.35 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. தினமும் 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் தாமதம், குழாய் உடைப்பு, கழிவுநீர் அடைப்பு குறித்து வார்டு இளநிலை பொறியாளர், மண்டல பகுதி பொறியாளர், தலைமை அலுவலக அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் வகையில், தனித்தனி மொபைல் போன் எண்கள் வழங்கப்பட்டு உள்ளன.
தவிர 044 -- 4567 4567 என்ற எண்ணிலும், கட்டணமில்லாமல், '1916' எண், www.chennaimetrowater.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். எக்ஸ், பேஸ்புக் சமூகவலைதளங்கள் மற்றும் இ -- மெயில்' வாயிலாகவும் புகார்கள் பதிவு செய்ய முடியும்.
முதல்வர் தனிப்பிரிவில் அளிக்கும் புகார்கள், அந்தந்த வார்டு இளநிலை பொறியாளர்கள் கவனத்திற்கு அனுப்பப்படும். புகார் தெரிவிப்பவரின் மண்டலம் எண், வார்டு எண், தெரு பெயர், கதவு எண் உள்ளிட்டவை அடங்கிய முகவரியின் அடிப்படையில், அதிகாரிகள் கள ஆய்வு, ஆவணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர்.
சென்னை மாநகராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டன. பெரிய வார்டுகளில் இருந்து, 10 முதல் 25 சதவீதம் தெருக்கள், அருகிலிருந்த வார்டில் சேர்க்கப்பட்டன. இதன் அடிப்படையில், 2022 பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
கவுன்சிலர்கள் தலைமையிலான நிர்வாகம் துவங்கி, இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால், குடிநீர் வாரியத்தில் வார்டு மறுவரையறை அடிப்படையில் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் பணி முழுமை பெறவில்லை. ஒவ்வொரு வார்டிலும், சில தெருக்களை அருகிலுள்ள வார்டில் சேர்த்த நிலையில், அதுகுறித்த விபரத்தை குடிநீர் வாரிய ஆவணங்களில் சேர்க்கவில்லை.
இதனால், வரையறை வார்டு அடிப்படையில் தெரிவிக்கும் புகார்கள், புதிய வார்டு அதிகாரிக்கு செல்லாமல், பழைய வார்டு எண்ணுடைய அதிகாரிக்கு செல்வதால், நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் வரி, கட்டணம் செலுத்துவது, முகவரி மாற்றம், புதிய இணைப்பு பெறுதல் போன்ற பணிகளிலும் சிக்கல் ஏற்படுகிறது.
சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர், கடந்த 2022ம் ஆண்டு, செப்டம்பரில், 'வார்டு மறுவரையறை அடிப்படையில் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்' என உத்தரவிட்டார். அதன் பின், இரு ஆண்டுகள் கடந்தும் நிலைமை மாறவில்லை.
மொத்தமுள்ள 200 வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட விபரங்கள் அடிப்படையில், வாரிய இணைய ஆவணங்களில் மாற்றப்பட வேண்டும். இந்த பணியை, குடிநீர் வாரிய தொழில்நுட்ப பிரிவு செய்ய வேண்டும். ஆனால், நிர்வாக குளறுபடியால், பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் தங்கள் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடியாமல் திணறுகின்றனர். மேலாண்மை இயக்குனர் மீண்டும் தலையிட்டு, வார்டு மறுவரையறை அடிப்படையில், குடிநீர் வாரிய பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- -நமது நிருபர் --