டில்லி 'உஷ்ஷ்ஷ்... !': காங்., தேசிய தலைவர் பிரியங்கா?
டில்லி 'உஷ்ஷ்ஷ்... !': காங்., தேசிய தலைவர் பிரியங்கா?
ADDED : ஜன 11, 2026 03:43 AM

காங்., தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில், தற்போது இரண்டு குறிப்புகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒன்று, மறைந்த காங்., மூத்த தலைவர், மக்கன்லால் போத்ததார் எழுதிய புத்தகத்தின் ஒரு பகுதி. 40 ஆண்டுகளுக்கு முன், 'போத்ததார் சினார் லீப்ஸ்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
அதில், அப்போதைய பிரதமர் இந்திரா, 1984ல் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், வெளிநாடு சென்று திரும்பி வரும் போது, விமானத்தில் தன்னிடம் என்ன பேசினார் என்பதை இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், 'என் அரசியல் வாரிசு பிரியங்கா தான். அவர் தான், பிரதமராக வர வேண்டும்' என, போத்ததாரிடம் சொன்னாராம் இந்திரா. இந்த குறிப்பு தான், காங்., தலைவர்கள் மத்தியில் வலம் வருகிறது. அடுத்தது, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எழுதிய புத்தகம்.
அந்த புத்தகத்தில், ராகுலை குறித்து ஒபாமா குறிப்பிட்டுள்ளார். அதில், 'ராகுல் பதற்றத்துடன் இருப்பவர்; முதிர்ச்சி இல்லாதவர். ஒரு மாணவர், ஆசிரியரின் பாராட்டைப் பெற ஆசைப்பட்டாலும், அதற்கான தகுதியில்லாதவர் ராகுல்' என, குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு குறிப்புகளும் தான், காங்., தலைவர்கள் மத்தியில் பரவி வருகின்றன.
'ராகுலை விட பிரியங்கா விஷயம் தெரிந்தவர். அவரால் தான், காங்., மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்' என்று, பிரியங்கா ஆதரவாளர்கள் இந்த குறிப்புகளை வினியோகித்து வருகின்றனர். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிந்த பின், பிரியங்காவை தலைவராக்க முயற்சிகள் நடைபெற உள்ளதாம்.

