UPDATED : ஜூலை 06, 2024 04:57 AM
ADDED : ஜூலை 06, 2024 02:12 AM

பொள்ளாச்சி;'இன்றே கடைசி தேதி, கட்டணம் செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்; பணம் கட்டுவதற்கு 'லிங்க்'யை, கிளிக் செய்யவும், என்று வரும் எஸ்.எம்.எஸ்.,யை நம்பி ஏமாறாதீர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரில், சமீபகாலமாக பலரின் மொபைல்போன் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., வந்த வண்ணம் உள்ளது. அதில், மின் கட்டணம் கட்டுவதற்கு இன்றே கடைசி நாள்; செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
பணம் கட்டுவதற்கு கீழே உள்ள 'லிங்க்'யை கிளிக் செய்யவும். அல்லது குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு போன் செய்யவும் என்று உள்ளது. இத்தகைய எஸ்.எம்.எஸ்.,யை, நம்ப வேண்டாம் என, மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
அவரவர் வீடுகளில், கணக்கீட்டாளர் மின் கணக்கீடு செய்து, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்தவுடன், மின்நுகர்வோரின் மொபைல்போன் எண்ணுக்கு கட்டணம் விபரம் மற்றும் அதற்கான தேதி உள்ளிட்டவை எஸ்.எம்.எஸ்., ஆக சென்று விடும்.
இதேபோல, கட்டணம் செலுத்தியவுடன் அதற்கான எஸ்.எம்.எஸ்., வரும். இதுதவிர மின் தடை குறித்த விபரம், மின்வாரியத்தால் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படுகிறது.
ஆனால், குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்தவும், தவறும்பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற எஸ்.எம்.எஸ்., மின்வாரியத்தால் அனுப்பப்படுவது கிடையாது. அதனால், இத்தகைய போலியான எஸ்.எம்.எஸ்.,யை நம்பி ஏமாற வேண்டாம்.
சிலர், அதனை நம்பி, பணம் கட்டுவதற்கு லிங்கை கிளிக் செய்து, வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி.,யை உள்ளீடு செய்து, பணத்தை இழப்பதும் தெரியவந்துள்ளது. 'ஆன்லைன்' வழி மோசடிக்காரர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
மக்கள் 'அலர்ட்' ஆக இருக்க வேண்டும். மின் இணைப்பின் நிலை மற்றும் மின் கட்டண தகவல்களை, https://tangedco.org இணையதளத்தில் சரிபார்க்கலாம். மோசடியாக வரும் எண்களுக்கு பதிலளிக்கவோ அல்லது திரும்ப அழைக்கவோ வேண்டாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.