புகைப்பவரை விட அதை சுவாசிப்போருக்கு நோய் வாய்ப்பு: டாக்டர்கள் எச்சரிக்கை
புகைப்பவரை விட அதை சுவாசிப்போருக்கு நோய் வாய்ப்பு: டாக்டர்கள் எச்சரிக்கை
UPDATED : ஜூன் 01, 2024 04:52 AM
ADDED : மே 31, 2024 11:08 PM

'புகைப்பவரை விட, அவர் விடும் புகையை சுவாசிக்கும் குழந்தைகள் மற்றும் பிற மக்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்' என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இதனால் தான் பொது இடங்களில் புகைப்பிடிப்பது, குற்றம் என அறிவிக்கப்பட்டது. பொது இடங்களில் புகையை ஊதித்தள்ளினால், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
'புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், ஒவ்வொரு ஆண்டும், 60 லட்சம் பேர் இறக்கின்றனர். பற்ற வைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும், வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை குறைக்கிறது' என சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தார், நிகோடின், அம்மோனியா, மீத்தேன், கார்பன் மோனாக்சைடு, டொலுயின், கேட்மியம் மற்றும் பல நச்சுப்பொருட்கள் சிகரெட்டில் கலந்துள்ளன. கார்பன் மோனாக்சைடு, திசுக்களுக்கு செல்லும் ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்கிறது. நிகோடின், புகைப்பிடிக்கும் பழக்கத்தை நம்மை அடிமைப்படுத்துகிறது; இதய துடிப்பை அதிகரிக்க செய்கிறது.
மூளையில், டோபொமைன் என்ற நச்சுப்பொருளை சுரக்கச்செய்து, நரம்பு மண்டலத்தை பாதிக்கச்செய்கிறது என்ற விழிப்புணர்வு ஆண்டுதோறும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல், குரல் வளை, வாய், உணவுக்குழாய், தொண்டை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம், பெருங்குடல் மற்றும் கருப்பை வாய் என பல இடங்களில் புற்றுநோய் ஏற்படும் என, மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் உடல் பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் நோக்கில் தான், ஆண்டுதோறும், மே 31ல், சர்வதேச புகையிலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தாண்டின் மையக்கருத்து, 'புகையிலை தொழிலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது' என்பதே.
இதுகுறித்து, அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வித்துறையினரும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வாயிலாக, பல்வேறு போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
- நமது நிருபர் -

