பி.எப்., ஓய்வூதியம் பெற எளிய வசதி: புத்தாண்டு முதல் வழங்க ஏற்பாடு
பி.எப்., ஓய்வூதியம் பெற எளிய வசதி: புத்தாண்டு முதல் வழங்க ஏற்பாடு
ADDED : செப் 05, 2024 12:56 AM

புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப்., கணக்கில் இருந்து, நாட்டின் எந்த பகுதியில், எந்த வங்கியில் இருந்தும் ஓய்வூதிய பணத்தை எடுக்கும் வசதி, புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:
பி.எப்., கணக்கில் மாதந்தோறும் சேரும் பணத்தில் ஒரு பகுதி, தொழிலாளரின் ஓய்வூதியத்துக்கு என பிடித்தம் செய்யப்பட்டு வைக்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறத் துவங்கும்போது, தொழிலாளரின் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் இருந்து மட்டும் தொகையை எடுக்கும் நடைமுறை இப்போது உள்ளது.
அதை மாற்றி, மையப்படுத்தப்பட்ட நடைமுறையில் எங்கிருந்தும், எந்த வங்கிக் கணக்கிலும் இருந்தும் பணம் பெறும் வசதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
தொழிலாளர் ஓய்வூதிய திட்டம், 1995ன் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த வசதி அமலுக்கு வரும்.
ஓய்வு பெற்ற பிறகு, வசிப்பிடத்தை மாற்றுவோர், அடிக்கடி வெளியூர் பயணம் செல்வோர், இருந்த இடத்திலேயே, அருகில் உள்ள எந்த வங்கியிலும், எந்த கிளையிலும் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற முடியும்.
பி.எப்., கணக்கில் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் பென்ஷன் பேமென்ட் ஆர்டரை, ஓய்வூதியதாரர் வசிப்பிடம் மாறும்போது, ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றும் அவசியமும் இனி இருக்காது.
ஓய்வூதியம் பெறும் வங்கிக் கணக்கையோ, வங்கிக் கிளையையோ மாற்ற வேண்டிஇருக்காது.
ஓய்வு பெற்றபிறகு தங்கள் சொந்த ஊருக்கு இடம்பெயரும் ஓய்வூதியதாரருக்கு, இது மிகப்பெரிய நிம்மதியையும், மனநிறைவையும் அளிக்கும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.