sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கிருஷ்ணகிரியில் கல் திட்டைகளை கண்டறிந்த அரசு பள்ளி மாணவர்கள்

/

கிருஷ்ணகிரியில் கல் திட்டைகளை கண்டறிந்த அரசு பள்ளி மாணவர்கள்

கிருஷ்ணகிரியில் கல் திட்டைகளை கண்டறிந்த அரசு பள்ளி மாணவர்கள்

கிருஷ்ணகிரியில் கல் திட்டைகளை கண்டறிந்த அரசு பள்ளி மாணவர்கள்


ADDED : செப் 04, 2024 03:11 AM

Google News

ADDED : செப் 04, 2024 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், காமன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், 3,000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல் திட்டைகளை கண்டறிந்து உள்ளனர்.

கிருஷ்ணகிரி - ஓசூர் பெருவழியில், 25வது கி.மீட்டரில் உள்ளது சூளகிரி. சூளகிரி ஒன்றியத்தில் உள்ள காமன்தொட்டி என்ற ஊரில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.

இங்கு பட்டதாரி தமிழாசிரியராக பணியாற்றும் ஜெயலட்சுமி, சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடந்த தொல்லியல் வகுப்பில் பங்கேற்று, பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றத்தை துவங்கினார்.

அவர் ஒவ்வொரு வாரமும், மாணவர்களுக்கு பழங்கால நாணயங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், கற்கருவிகள், பழமையான பானை ஓடுகள், ஈமத்தாழிகள், கல் திட்டைகள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் குறித்த தகவல்களை, காணொலி வாயிலாக கற்பித்து வந்தார்.

இதனால் ஊக்கமடைந்த மாணவர்கள், விடுமுறை நாட்களில் தங்கள் ஊரில் தொன்மையான பொருட்கள் உள்ளனவா என தேடி வந்தனர். இரண்டு மாணவர்கள், தொன்மையான கல் திட்டைகளை கண்டறிந்து, ஆசிரியர் ஜெயலட்சுமியிடம் தகவல் அளித்தனர்.

அவரும் மாணவர்களும் அப்பகுதியை ஆய்வு செய்ததில், அவை, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களை புதைத்த இடங்கள் என்பது உறுதியானது.

இதுகுறித்து, ஆசிரியர் ஜெயலட்சுமி கூறியதாவது:

எங்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் அருண், சந்துரு ஆகியோர், காமன்தொட்டி சாலையின் இருபுறமும் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள தின்னுார் மற்றும் கோபச்சந்திரம் ஆகிய இடங்களில் உள்ள கல் திட்டைகளை கண்டறிந்து தெரிவித்தனர்; அவற்றை ஆய்வு செய்தோம்.

பொதுவாக, 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள், குழி வெட்டி, நான்கு புறமும் கற்பலகைகளை அமைத்து, அதில் இறந்தவர்களை புதைத்து, மேலே ஒரு பலகைக் கல்லால் மூடினர்.

அதன் மீது, மேலும் இதுபோல் கல் அமைப்புகளை நிறுவி வழிபட்டனர். இந்த அமைப்புக்கு, கல் திட்டை என்று பெயர்.

தின்னுார்


தென்பெண்ணை நதிக்கரையின் மேற்பகுதியில் உள்ளது தின்னுார். நீர்வளமும் நில வளமும் உள்ள இப்பகுதியில், அந்த காலத்தில் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் கல் திட்டை அமைத்துள்ளனர். இரண்டடி உயரம், 4.5 அடி நீளம் உள்ள இதன் இரண்டு கற்கள் கீழே சாய்ந்துள்ளன. நடுவில், இரண்டடி உயர குத்துக்கல் உள்ளது. அதன் அருகில் உள்ள ஓரடி கல்லில், குழி அமைப்பும், அதன் பக்கவாட்டில் பாறைக்கீறல்களும் உள்ளன.

பொதுவாக ஒரு இனக்குழுவின் தலைவன் இறந்தால், அவனைப் புதைத்த இடத்தில், தலைக்கல் என்பதை நிறுவுவது பழங்கால வழக்கம். அதாவது, குத்துக்கல்லில் ஒரு கிண்ணம் போன்ற குழியை அமைப்பர். அதற்கு, தலைக்கல் என்று பெயர். அதாவது, தலைவனின் கல் திட்டை என்பது பொருள்.

அப்படிப்பட்ட அரிய கல் திட்டையாக இது உள்ளது. இது தற்போது, கங்கம்மா என்ற பெயரில், அப்பகுதி மக்களின் வழிபாட்டில் உள்ளது.

கோபச்சந்திரம்


இங்குள்ள கல் திட்டை, நான்கடி உயரம், ஐந்தடி நீளமுள்ள நான்கு பலகைக் கற்களால் அமைந்துள்ளன. இதைச் சுற்றி, சிதைந்த நிலையில் கல் வட்டமும் உள்ளது.

கல் திட்டையின் கிழக்கு பக்கம் உள்ள பலகைக்கல் கீழே சரிந்துள்ளது. இதில் உள்ள கற்கருவிகள், தற்போது வெங்கட்நாராயணா என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளன.

3,000 ஆண்டு பழமை


இவை இரண்டின் அமைப்பும் முற்றிலும் மாறுபட்டுள்ளன. அதனால், இவை வெவ்வேறு இனக்குழு மற்றும் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

இவை, 3,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இந்த அமைப்புகளை, தற்போது அம்மன் மற்றும் பெருமாள் பெயரில் அங்குள்ளவர்கள் வழிபடுகின்றனர்.

இவற்றை கண்டறிந்த மாணவர்களை, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும், இதுபோன்ற வரலாற்று தடயங்களை தேடும்படியும் உற்சாகப்படுத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தின்னுார் கல் திட்டை.






      Dinamalar
      Follow us