அரசியல்வாதிகள் பள்ளிகளில் ஹிந்தி உண்டு; அரசு பள்ளிகளில் இல்லை..
அரசியல்வாதிகள் பள்ளிகளில் ஹிந்தி உண்டு; அரசு பள்ளிகளில் இல்லை..
UPDATED : பிப் 22, 2025 06:57 AM
ADDED : பிப் 22, 2025 06:47 AM

விழித்துக்கொள்ளுங்கள் மாணவர்களே
பாலகுருசாமி, முன்னாள் துணைவேந்தர்: தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் தார்மீக, நெறிசார்ந்த, அறிவார்ந்த, வலிமையான இளைஞர் சக்தியை உருவாக்கி நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வது தான். எதிர்காலத்தில் நான்காம் தொழிற்புரட்சி சூழலில் உருவாகும் சவால்களை எதிர்கொள்வதற்கான கல்வி தரம், புதுமையாக்கம், ஆய்வு மனப்பான்மை இக்கொள்கையில் உள்ளன.
தமிழகத்தில் நிலவுவது போல் இக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் கட்டாயம் ஹிந்தி படிக்க வேண்டும் என்பது இல்லை. அரசியல் சட்டத்தில் அட்டவணையிடப்பட்ட ஏதாவது ஒரு இந்திய மொழியை மூன்றாவது மொழியாகக் கற்பிக்க பரிந்துரை செய்கிறது அவ்வளவு தான். திராவிட மாடல் அரசு எனக் கூறிக்கொள்ளும் தமிழகத்தில் திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் கற்கலாம். இது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் நடவடிக்கையாகும்.
தமிழகத்தில் 25 சதவீதம் பேர் தெலுங்கு பேசுவோர் உள்ளனர். அதுபோல் கன்னடம், மலையாளம்பேசுவோரும் கணிசமாக வசிக்கின்றனர். மும்மொழித் திட்டம் மூலம் இவர்கள் தங்களது தாய்மொழிகளை கற்க வழிசெய்யும்.
மும்மொழித் திட்டத்தின் பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்று நாட்டில் உள்ள பல மொழிகள் கொண்ட கட்டமைப்பு சீராக இருப்பதை உறுதி செய்வது ஆகும். பல்வேறு பண்பாடுகள், மொழிகள் இருப்பது நம் நாட்டின் வரப்பிரசாதமாகும். எனவே, பல மொழிகளை கற்பதற்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். குறுகிய அரசியலுக்காக ஒருவரை குறுக்கிவிடாமல், அவரது அடித்தளத்தை விரிவு செய்யும்.
வேண்டாம் இரட்டை வேடம்
தமிழ் நீங்கலாக வேறொரு இந்திய மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்வதை 60 ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வரும் ஒரே மாநிலம் தமிழகம். இருமொழிக் கொள்கைகள் போதும் என்பதால் ஏழைகள், கிராமப்புற எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுககுக் கூடுதலாக ஒரு மொழியைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
அதே சமயம் மத்திய அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் சேரும் பணக்கார, நகர்ப்புற மாணவர்கள் தாங்கள் விரும்பும்எந்த மொழியையும் கற்கும் உரிமையை பெறுகிறார்கள். மும்மொழித் திட்டத்தை எதிர்ப்போரின் பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக் குழந்தைகள் ஹிந்தியை எவ்வித தடையுமின்றி மகிழ்ச்சியாக கற்கின்றனர் அல்லது கற்றார்கள். அது மட்டுமல்ல, பல தலைவர்கள் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்துகின்றனர் என்பதும் மக்களுக்கு தெரிய வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு.
பெரும்பாலான அரசியல் தலைவர்கள் பேசுவது, தேசிய கல்விக் கொள்கையின் உண்மையான நோக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை அல்லது அரசியல்நோக்கமாக இருக்கலாம். இது மிகவும் வேடிக்கையானது. தமிழக அரசியல் தலைவர்கள், குறிப்பாக புதிய தலைவர்கள் எதையும் தர்க்கப் பார்வையுடன், காரண காரிய அடிப்படையில் அல்லது ஆய்வு நோக்கத்துடன் அணுகுவதில்லை. மக்களை ஏமாளிகளாக்குவதற்கு எளிய வழியை மேற்கொள்கின்றனர்.
இத்தகைய குறுகிய பார்வையுள்ள தலைவர்கள், கல்வியின் தரத்தை பற்றியோ அல்லது பல்லாயிரம் மாணவர்களின் தேவைக்கான அறிவார்ந்த அணுகுமுறை குறித்தோ கவலைப்படுவதில்லை. எனவே, சுயலாபத்துக்காக 'வாக்கு வங்கி அரசியலில்' ஈடுபடும் இந்த அரசியல்வாதிகளின் மாய்மாலத்துக்கு மக்கள் இரையாகிவிடாதீர்கள். குறிப்பாக மாணவர்கள் விழித்துக்கொள்ளுங்கள்.
ஆராய்ச்சிக்கு பன்மொழி கற்றல் அவசியம்
எம்.செந்தில் மணிராஜன், அறிவியல்ஆராய்ச்சியாளர், ராமநாதபுரம்: தமிழ், ஆங்கிலம் என்பது நமது கண்கள் போன்றது. ஹிந்தி போன்ற பிற மொழிகள் மூக்கு கண்ணாடி போன்றது. மத்திய அரசின் மும்மொழி கொள்கையில் ஹிந்தி மட்டும் கற்க வலியுறுத்தவில்லை. மூன்றவாதாக ஒரு மொழியை மாணவர்கள் கற்றுகொள்வது அவசியம் என்று தான் கூறப்பட்டுள்ளது.
அறிவியல் ஆராய்ச்சி கருத்தரங்குகளில் பங்கேற்க அடிக்கடி வெளிநாடு, மாநிலங்களுக்கு சென்று வருகிறேன். பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் வெளி மாநிலங்களில் ஆராய்ச்சி சம்பந்தமான கருத்தரங்கில்கலந்து கொள்ளும் போது ஹிந்தி உட்பட அம்மாநில மொழி தெரிந்திருந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
குறிப்பாக பிரான்சில் ஆராய்ச்சி செய்ய செல்பவர்களுக்கு அந்த நாட்டு மொழி தெரிந்திருப்பது அவசியமாகும். தாய்மொழி தமிழ் அவசியம், ஆங்கிலம் முக்கியம், அத்துடன் மூன்றாவதாக ஒரு மொழி கற்றுக்கொண்டால் தமிழக மாணவர்கள் அவர்களது உயர்கல்வி ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கு பெரிதும் பயன்படும்.
மொழி அறிவு அவசியம்
கே.ஜி.கணேஷ், வழக்கறிஞர், ராமநாதபுரம்: தாய் மொழியான தமிழ் மொழி முக்கியம் தான். அடுத்த மாநிலங்களுக்கு செல்லும் போது பிற மொழிகள் தெரியாமல் அவதிப்படுகின்றனர். மும்மொழி அறிவை வளர்த்துக்கொள்வதில் தவறில்லை. நீதிமன்றத்தில் கூட வழக்காடு மொழியாக ஆங்கிலேயர்களின் ஆங்கில மொழியைத்தான் பயன்படுத்துகின்றோம்.
தமிழ் மொழியை மட்டும் கற்பதால் பயனில்லாமல் போகிறது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள்தமிழ் கற்றுக்கொண்டு பணி செய்கின்றனர். அதே போல் நாம் வட மாநிலங்களுக்கு செல்லும் போது அங்குள்ள மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை.
'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பது போல் தமிழ் மொழியை மட்டும் கற்றுக்கொள்வதால் பயனில்லை. வசதியுடையவர்கள், அரசியல்வாதிகளின்குழந்தைகள் மும் மொழிகளை கற்றுக்கொள்கின்றனர்.
கிராமப்புற பாமர ஏழை குழந்தைகளுக்கு மும்மொழி கற்பதற்கான வாய்ப்பில்லாமல் போகிறது. மும்மொழியை படிப்பதில் எந்த சிரமமும் ஏற்படப் போவதில்லை. மும்மொழியை படிப்பது அந்தந்த குழந்தைகளின் உரிமை. அதனை தடுத்து நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மொழி அறிவு அனைவருக்கும் அவசியம்.
கல்வியாளர்களே ஒன்று கூடுங்கள்
த.ரமேஷ், தனியார் பள்ளி தாளாளர்,குத்துக்கல்வலசை: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை பள்ளிக் கல்வித்துறை ஏற்படுத்தி தந்தாலும் வரக்கூடிய காலங்களில் படித்து முடித்து வேலை வாய்ப்பிற்கான அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மொழி புலமை அவசியமாகிறது.
தமிழ், ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இந்திய மொழிகளில் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்வது தற்போதைய காலக்கட்டங்களில் அவசியத் தேவையாக உள்ளது. கிணற்றுத் தவளையாக இருந்த காலம் மலை ஏறிப்போய்விட்டது. இன்றைய உலகம் பரந்து விரிந்து அறிவுசார்ந்த விஷயங்களை உள்வாங்கி வருகிறது.
வளரும் தலைமுறை மாணவர்களுக்கு போதிய மொழிப் புலமையை ஏற்படுத்தி தருவது அரசின் கட்டாய கடமையாகும். அந்த வகையில் இதற்கான முன்னெடுப்பை கல்வியாளர்களை ஒன்று திரட்டி மாணவர்களின் அறிவு வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டங்களை தயாரிக்க வேண்டும்.
அரைத்த மாவை அரைக்காமல் புதிதாக மும்மொழி கொள்கையை உருவாக்குவதற்கு செயல் வடிவம் தர வேண்டும். அதற்கான செயல் திட்டங்கள் பெற்றோர், மாணவர்கள்,கல்வியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் மூலம் துவங்கட்டும்.
வேலைவாய்ப்பிற்கு மும்மொழி அவசியம்
டி.கே.ஜெயப்பிரகாஷ், முதுகலை ஆசிரியர், பரமக்குடி: தமிழ், ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழி என்பது தற்போதைய கால சூழலில் ஒவ்வொரு மாணவருக்கும் அவசியமாகிறது. வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மும்மொழி கற்று இருந்தால் அவர்களால் எதையும் திறமையாக எதிர்கொள்ள முடியும்.
வெளி உலகில்ஒருவரின் திறமையை வெளிப்படுத்த மொழி ஒரு கருவியாகும். மொழியை வைத்து தான் எதிரில் இருப்பவர்களுக்கு,தான் கற்ற ஒரு நிகழ்வை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க இயலும். எண்ணத்தின் உணர்வுகளை உணர்ந்து பேசி கற்றுக் கொடுக்க முடியும்.
ஒரு ஆசிரியர் அல்லது மற்ற பணிக்கு மாற்று மாநிலங்களில் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்று கற்று இருந்தால் அதற்குரிய இடத்தில் நாம் மொழியை உணர்ந்து பேசி வேலை வாங்க முடியும். இதனால் மொழி என்பது வேலை வாய்ப்பிற்கு துணையாக நிற்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே ஒவ்வொரு மாணவருக்கும் தற்போது மூன்றாவது மொழி அவசியமாகிறது என்றார்.
ஹிந்தி படித்தால் நல்லது
எம்.சுடலை, சமூக ஆர்வலர், ராமேஸ்வரம்: தனியார் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஹிந்தியை பணக்கார குழந்தைகள்,சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் குழந்தைகள் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதேபோல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகள் ஹிந்தி படித்தால் நல்லது தானே.
இந்தியா முழுவதும் உயர் கல்வி படிக்க, வியாபார ரீதியாக வெளி மாநிலம் செல்ல நல்ல வாய்ப்பை உருவாக்கும். ஹிந்தி படிப்பதால் தமிழக மாணவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட போகிறது. ஹிந்தி பயின்று தமிழக மாணவர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்வதன் மூலம் தமிழகத்தில் வேலையில்லாதபிரச்னையை தவிர்க்க முடியும்.
எனவே மாணவர்களின் எதிர்கால நலன் கருதி தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முன்வர வேண்டும்.