கோவையில் மண்வளம் கொள்ளை: அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை
கோவையில் மண்வளம் கொள்ளை: அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை
ADDED : செப் 06, 2024 12:49 AM

கோவை : கோவை மாவட்டத்தின் மேற்கு புறநகரான தொண்டாமுத்துார் வட்டார பகுதியின் மூன்று புறங்களும், மேற்குத்தொடர்ச்சி மலையை அரணாக கொண்ட இயற்கை எழில் சூழ்ந்த பகுதி.
சில ஆண்டுகளாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள புறம்போக்கு, பட்டா நிலங்களில், அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டது.
இதுகுறித்து, நம் நாளிதழில் மார்ச் மாதம் செய்தி வெளியிடப்பட்டது. கனிம வளம் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, மண் கொள்ளையில் ஈடுபட்டோர் மீது போலீசில் புகார் அளித்தனர்.
மலை அடிவாரம்
தொண்டாமுத்துார் ஸ்டேஷனில் வழக்கும் பதியப்பட்டது. அதன் பின், சில மாதங்கள் மண் கொள்ளை நிறுத்தப்பட்டது.
தற்போது, மங்களபாளையம், மூங்கில் மடை குட்டை, மூலக்காடு, வெள்ளிமலைப்பட்டினம் ஆகிய பகுதிகளில், மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் பட்டா நிலங்களில், மீண்டும் அனுமதியின்றி கிராவல் மண் மற்றும் செம்மண் வெட்டி எடுத்து டிப்பர் லாரிகளில் கொள்ளையடிக்க துவங்கியுள்ளனர்.
அன்னுாரில் அக்கரை செங்கப்பள்ளி மற்றும் குப்பனுார் ஊராட்சிகளில் சில மாதங்களாக லோடு, லோடாக மணல் எடுத்து விற்கப்படுகின்றன.
குறிப்பாக, அக்கரை செங்கப்பள்ளி, வாக்கனாம் கொம்பு, அழகேபாளையம், சொலவம்பாளையம், ஆத்தி குட்டை ஆகிய ஊர்களில் மண் எடுக்கப்படுகிறது.
சில இடங்களில் பட்டா நிலத்தில், உரிமையாளரின் பெயரில் கனிமவளத் துறையில் அனுமதி பெறப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட, மூன்று முதல் ஐந்து மடங்கு ஆழத்துக்கு மண் வெட்டி எடுக்கப்படுகிறது.
ஒரே பர்மிட்டை வைத்து ஐந்து லோடுகள் ஓட்டப்படுகின்றன. பல்வேறு கம்பெனிகளுக்கு சொந்தமாக பல நுாறு ஏக்கர் நிலங்கள் உள்ளன.
அனுமதி
கண்காணிப்பு இல்லாத அந்த நிலங்களிலும் உரிய அனுமதி இல்லாமல், லோடு கணக்கில் மண் எடுத்து வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில், குட்டைகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
விவசாயிகள் 'ஆன்லைன்' வாயிலாக 'பர்மிட்' பெற்று, லாரிகளில் வண்டல் மண் எடுத்து வருகின்றனர். விவசாயிகள் பெயரில் பர்மிட் வாங்கியுள்ள சிலர், வண்டல் மண்ணை இரவு நேரங்களில் எடுக்கின்றனர். அவற்றை மதுக்கரை, பொள்ளாச்சி பகுதிக்கு கொண்டு செல்கின்றனர்.
கேரளாவுக்கு கடத்திச் சென்று கிராவல் மண்ணாக விற்பனை செய்கின்றனர். இரவு, பகலாக நடக்கும் இதுபோன்ற கனிமவள கொள்ளையை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, மண் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.