தனியார் பால் கொள்முதல் குறைப்பு: கடும் அதிர்ச்சியில் விவசாயிகள்
தனியார் பால் கொள்முதல் குறைப்பு: கடும் அதிர்ச்சியில் விவசாயிகள்
ADDED : ஜூலை 09, 2024 04:53 AM

சென்னை : தனியார் பால் கொள்முதல் குறைக்கப்பட்டு வருவதால், தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாள்தோறும் 1.50 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில், ஆவின் வாயிலாக 35 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள பால், உள்ளூர் தேவைக்கும், பல்வேறு நிறுவனங்களில் பால் பொருட்கள் தயாரிப்பதற்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும், கடந்தாண்டு முதல் பால் உற்பத்தி குறைந்து, தட்டுப்பாடு அதிகரித்தது. தற்போது, இம்மாநிலங்களில் மட்டுமின்றி, பல்வேறு வட மாநிலங்களிலும் பால் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் செய்து வந்த பால் கொள்முதலை, பல்வேறு நிறுவனங்கள் குறைக்கத் துவங்கியுள்ளன. கொள்முதல் விலையும் லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைக்கப்பட்டு உள்ளது. பல நிறுவனங்களின் கொள்முதல் நிலையமும் மூடப்பட்டு வருகிறது. இதனால், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி அறிக்கை:
பால் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாகக் கூறி, பால் கொள்முதலை மட்டுமின்றி, விலையையும் தனியார் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. பால்வளத் துறையால், தனியார் நிறுவனங்களின் விலை குறைப்பை தட்டிக் கேட்க முடியாத நிலையில் சட்டம் உள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோர், ஆவின் பால் கொள்முதலில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், தனியாருக்கு பால் வழங்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இனியாவது இப்பிரச்னையில் அரசு தலையிட்டு, குறைக்கப்பட்ட பால் கொள்முதல் விலையை மீண்டும் அதிகரித்து வழங்க வேண்டும்.
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தலைமை செயலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.