UPDATED : ஆக 14, 2024 04:50 AM
ADDED : ஆக 13, 2024 11:48 PM

சென்னை:தீவிர மன அழுத்தம் இருந்தால், 50 முதல் 60 வயது பெண்களுக்கு, இதய ரத்த நாளத்தில் கிழிசல் ஏற்படுகிறது என, ராமச்சந்திரா மருத்துவமனையின் இதயநல முதுநிலை டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் இதயநல முதுநிலை டாக்டர் எஸ்.தணிகாசலம், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் நாகேந்திர பூபதி ஆகியோர் கூறியதாவது:
சர்க்கரை நோய், உயர் கொழுப்புச் சத்து, உடல் பருமன், புகைப் பிடித்தல், போதிய உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், இதய ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அத்தகைய எந்த பாதிப்பும் இல்லாமல், 60 வயது பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், அவருக்கு இதய ரத்த நாளத்தில் லேசான அடைப்பு இருந்தது.
அதற்கு அடுத்த நாளில் நெஞ்சுவலி அதிகரிக்கவே, மீண்டும் மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில், ரத்த நாளத்தில் கிழிசல் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவற்றை கையாளுவதற்கான பயிற்சிகளும், மருத்துவ அறிவுரைகளும், அப்பெண்ணுக்கு வழங்கப்பட்டன.
பொதுவாக, 50 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு அதிக மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் இருக்கும் போது, இதய ரத்த நாளங்களில் கிழிசல் ஏற்படுகிறது.
எனவே, அத்தகைய பாதிப்புகள் உள்ள பெண்கள் நெஞ்சுவலி ஏற்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.