விசாரணையில் துப்பு கிடைக்காமல் திணறல்; போலீசுக்கு சவாலான ஜெயகுமார் வழக்கு
விசாரணையில் துப்பு கிடைக்காமல் திணறல்; போலீசுக்கு சவாலான ஜெயகுமார் வழக்கு
ADDED : மே 13, 2024 04:26 AM

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவராக இருந்த ஜெயகுமார், அவருடைய தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடலில் கம்பி கட்டப்பட்டு, வாயில் பாத்திரம் துலக்க பயன்படும் பொருள் திணிக்கப்பட்டு இருந்ததால், அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர்.
மேலும், ஜெயகுமார் எரிந்த நிலையில் கிடந்த தோட்டத்தைச் சுற்றிலும், தடயங்கள் ஏதும் சிக்குகிறதா என, தடய அறிவியல் நிபுணர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எரிந்த நிலையில் கிடைத்த ஒரு டார்ச் லைட்டை சமீபத்தில் கைப்பற்றியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, கடந்த 2ம் தேதி இரவு ஜெயகுமார் எங்கு புறப்பட்டு சென்றார் என்பதை, மொபைல்போன் டவர் வாயிலாக கண்டறிந்துள்ளனர்.
டார்ச் லைட்
அதாவது, கரைசுத்துப்புதுாரில் இருந்து காரில் சென்ற ஜெயகுமார், திசையன்விளையில் ஒரு பேன்சி ஸ்டோருக்கு சென்று, அங்கு டார்ச் லைட் வாங்கியுள்ளார்.
அதை, அந்தப் பகுதியில் உள்ள, கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக போலீசார் கண்டறிந்துள்ளனர். தற்போது, டார்ச் லைட்டை ஜெயகுமார் ஏன் வாங்கினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேறு வலுவான தடயங்கள் இல்லாத நிலையில், டார்ச் லைட் வாயிலாக ஏதும் துப்பு கிடைக்குமா என்றும், போலீசார் விசாரணை நடத்தினர்; அப்படி எதுவும் கிடைக்காததால் சோர்வடைந்து உள்ளனர்.
இதுதொடர்பாக, நெல்லை போலீசார் கூறியதாவது
ஜெயகுமார் கொலை செய்யப்பட்டது உறுதியானாலும், அதை யார் செய்தது என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. சிறு துரும்பு கிடைத்தாலும், அதை தடயமாக கருதி விசாரணை மேற்கொள்கிறோம்; ஆனாலும், முன்னேற்றமில்லை.
கடந்த 2ம் தேதி இரவு 7:30 மணிக்கு, தன் வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட ஜெயகுமார், உவரியை அடுத்த குட்டம் வழியாக தோப்புவிளைக்கு சென்றுள்ளார்.
அரசுக்கு நெருக்கடி
அதன்பின், அவரின் மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது. கரைசுத்துப்புதுாரில் இருந்து தோப்புவிளை, 15 கி.மீ., தான். ஆனாலும், 45 கி.மீ., துாரம் சுற்றிச் சென்றுள்ளார். போகும் வழியில் அணைக்கரை பகுதியில் பெட்ரோல் பங்கில், காருக்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.
அப்போது, காரில் அவர் மட்டுமே இருந்ததை, பெட்ரோல் பங்க் சிசிடிவி காட்சிகளும், அங்கு பணியில் இருந்தவர்களும் உறுதி செய்துள்ளனர்.
வழக்கமான பாதையை தவிர்த்து தோப்புவிளைக்கு அன்றைய தினம் மட்டும் ஏன் சுற்றிச்செல்ல வேண்டும்; மீண்டும் கரைசுத்துப்புதுாருக்கு எப்படி வந்தார் என்ற கேள்வியும் எழுகிறது.
இதுவரை, ஜெயகுமார் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என, 78 பேரை விசாரித்துள்ளோம். எந்த துப்பும் கிடைக்கவில்லை. சவாலான வழக்காக ஜெயகுமார் கொலை வழக்கு உள்ளது.
விசாரணை இழுத்துக் கொண்டே போவதால், அரசியல் ரீதியில் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, வழக்கு விரைவில், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்படலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -