ADDED : மார் 01, 2025 01:17 AM

'மொழியை படிப்பதற்கான தேர்வு, நம் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்' என, கவர்னர் ரவி தெரிவிக்க, அதற்கு, 'தமிழகம் வந்து, மொழி பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை' என, தமிழக அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
கவர்னர் ரவி அறிக்கை: தென் மாவட்டங்களை சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் 'ஸ்டார்ட் அப்'கள், பெண் தொழில் முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.
ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும், வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும், தொழில் முனைவுத்திறனையும் காண்பது, ஊக்கம் அளிப்பதாக இருந்தது.
இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆனாலும், இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில் மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கின்றனர்.
இளைஞர்கள் இடையே காணப்படும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்பு செய்திகளில் இடம்பெறும் திட்டமிட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இருமொழிக் கொள்கை காரணமாக, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது, இந்த பிராந்திய இளைஞர்கள், வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கின்றனர்.
ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில், துரதிருஷ்டவசமாக எந்தவொரு தென் மாநில மொழியையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக, அவர்கள் உணர்கின்றனர். இது உண்மையிலேயே நியாயமற்றது.
மொழியை படிப்பதற்கான தேர்வு, நம் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-நமது நிருபர்-