நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் அணைகளை துார் வாரலாமே!
நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் அணைகளை துார் வாரலாமே!
ADDED : மே 06, 2024 12:59 AM

தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான அணைகள் வறண்டு விட்டன. பரிசல் பயணிக்க வேண்டிய அணையில், பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது.
குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்போதே இப்படி என்றால், வரும் காலத்தை, எப்படி சமாளிப்பது என்பது, பொதுமக்களின் கேள்வி.
இந்நிலை மீண்டும் திரும்பக் கூடாது என்றால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வரும் நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கவுள்ள நிலையில், வறண்டிருக்கும் அணைகளில், அதன் நீர் வழிப்பாதைகளில், தற்போது துார் வார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டுதலுடன், துார் வாரும் நடவடிக்கையை, பொதுமக்கள் ஒவ்வொருவரும் பங்கேற்கும் வகையில், மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை மக்கள் உணர்ந்துள்ள நிலையில், இதுகுறித்து கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, மழை வரும் என கணிக்கப்பட்ட நாட்களுக்குள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைப்பு ஏற்படுத்தி, பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில், வெயில் வாட்டாத காலை, மாலை என ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
அணைகளில் எடுக்கப்படும் மண்ணை, விவசாயிகளுக்கு வழங்கினால், விவசாய நிலங்களில் இம்மண்ணை பரப்பி விடும் போது, மண்ணுக்கு நுண்ணுாட்ட சத்து அதிகளவில் கிடைக்கும். மழை காலங்களில், நீரை தேக்கி வைக்கவும் முடியும்.
ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன், நீராதாரங்களில் நீரை சேமிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் போது, நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.
அ.தி.மு.க., ஆட்சியில், ஆறு, குளங்கள், குட்டைகளில், மழை காலங்களில் நீர் தேங்கும் வகையில், குடிமராமத்து திட்டம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் அத்திட்டம் கண்டுகொள்ளப்படவில்லை.
இதையும் சரியாக கையாண்டால், மக்களுக்கான நீர் தேவை நிறைவேற்றப்படும். ஊர் கூடி தேர் இழுத்தால் நிச்சயம் இத்திட்டம் வெற்றி பெறும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
- நமது நிருபர் -