16 ஆர்.டி.ஓ., ஆபீசுக்கு சொந்த கட்டடம் இல்லை; வாகனம், ஓட்டுனர் தகுதி சோதனையில் சிக்கல்
16 ஆர்.டி.ஓ., ஆபீசுக்கு சொந்த கட்டடம் இல்லை; வாகனம், ஓட்டுனர் தகுதி சோதனையில் சிக்கல்
UPDATED : டிச 05, 2024 06:28 AM
ADDED : டிச 05, 2024 12:18 AM

சென்னை, சென்னையில், ஆர்.டி.ஓ., என்ற, வட்டார போக்குவரத்து அலுவலகம், தென் சென்னை மற்றும் வட சென்னை என, பிரிக்கப்பட்டு உள்ளது.
வடசென்னை இணை கமிஷனரின் கீழ், தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு, அயனாவரம், அண்ணா நகர், பூந்தமல்லி, செங்குன்றம், திருவள்ளூர், ரெட்டேரி, அம்பத்துார் என, ஒன்பது ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன.
இதில், திருவள்ளூர், அண்ணா நகர் ஆகிய அலுவலகங்களுக்கு, சொந்த கட்டடம் மற்றும் மைதானம் உள்ளது. மீதமுள்ள ஏழு அலுவலகங்கள், வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன.
தென் சென்னை இணை கமிஷனரின் கீழ், காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, குன்றத்துார், கே.கே.நகர், வளசரவாக்கம், மந்தைவெளி, திருவான்மியூர், சோழிங்கநல்லுார், ஸ்ரீபெரும்புதுார், மீனம்பாக்கம் என, 11 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன.
இதில், கே.கே.நகர், மீனம்பாக்கம் அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் மற்றும் மைதானம் உள்ளது. மீதமுள்ள ஒன்பது அலுவலகங்கள், வாடகையில் செயல்படுகின்றன.
அதிகாரிகள் திணறல்
ஒவ்வொரு கட்டடத்திற்கும், 80,000 முதல் 1.20 லட்சம் ரூபாய் வரை வாடகை செலுத்தப்படுகிறது. இரண்டு கமிஷனர் அலுவலகத்திலும், 16 அலுவலகங்களுக்கு மைதானம் இல்லை.
வாகன போக்குவரத்து இல்லாத சாலைகள், இதர துறைகளில் திட்டங்களுக்காக காத்திருக்கும் திறந்தவெளி இடங்களில், '8' போடும் சோதனை, புதிய வாகனங்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படும் வாகனங்கள் தகுதி சான்றுக்கான ஆய்வு போன்றவை நடக்கின்றன.
குறுகிய சாலையாக இருந்தால், குறிப்பிட்ட விதிமுறைப்படி போதிய ஆய்வுகள் நடத்த முடியாமல், அதிகாரிகள் திணறுகின்றனர்.
மேலும், பறிமுதல் செய்யும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால், அந்த பணியும் முறையாக நடப்பதில்லை.
நாளுக்கு நாள், வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப வாகனங்கள் பாதுகாப்பாக இருப்பதையும், விபத்துகளை தடுக்க வாகனங்கள் ஓட்டுவதையும் முறையாக ஆய்வு செய்வது அவசியம்.
அதற்கு ஏற்ப, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் கட்டமைப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நடவடிக்கை இல்லை
இது குறித்து, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
பல அலுவலகங்கள், குறுகிய இடத்தில் உள்ளன. மைதானம் இல்லாததால், கிடைக்கிற இடங்களில் வாகன சோதனை, ஓட்டுனர் தகுதி சோதனை செய்கிறோம்.
விதிமீறல், வரி செலுத்தாதது, தகுதி சான்று, உரிமம் பெறாத வாகனங்கள், நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டும் லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க, அந்த வாகனங்களை பாதுகாக்க வேண்டும். அதற்கு மைதானம் இல்லை.
அலுவலக இடத்தில் நிறுத்தினால், டயர், இன்ஜினை திருடிச் செல்கின்றனர்.
அலுவலக நடவடிக்கை முடிந்து, வாகனம் எடுத்து செல்ல வரும் உரிமையாளர்களுக்கு பதில் கூற முடியாமல் தவிக்கிறோம். சிலர் இழப்பீடும் பெற்று செல்கின்றனர்.
நாங்களே பணம் போட்டு பொருட்களை வாங்கி கொடுத்த சம்பவங்களும் நடந்துள்ளன. மைதானம் இருந்தால், கேமரா, காவலாளி நியமித்து விதிமீறல் வாகனங்களை பறிமுதல் செய்து, விபத்து, வரி ஏய்ப்பு சம்பவங்களை தடுக்க முடியும்.
ஒவ்வொரு அலுவலகத்தில் இருந்தும், உயர் அதிகாரிகளுக்கு பல கடிதம் எழுதிவிட்டோம். நடவடிக்கை தான் இல்லை.
ஒரு அலுவலகம் கட்ட 5,000 சதுர அடி பரப்பு இடம் தேவை. கட்டடம் கட்ட துறை தயாராக உள்ளது. மைதானத்திற்கு ஒரு ஏக்கர் இடம் தேவை. இதை, வருவாய்த்துறை வாயிலாக பெற்றுத்தர, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.