கடனை கட்டாயமாக வசூலிக்க முயன்றால் 5 ஆண்டு சிறை: அடாவடியை தடுக்க அரசு மசோதா தாக்கல்
கடனை கட்டாயமாக வசூலிக்க முயன்றால் 5 ஆண்டு சிறை: அடாவடியை தடுக்க அரசு மசோதா தாக்கல்
ADDED : ஏப் 27, 2025 01:49 AM

சென்னை: வலுக்கட்டாய கடன் வசூல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, புதிய சட்டத்தை தமிழக அரசு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. அடாவடியாக கடன் வசூலில் இறங்கும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க, இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
சிறு தொழில்கள் துவங்குதல், வீடுகள் கட்டுதல், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குதல், கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம் உள்ளிட்ட காரணங்களுக்காக, பலரும் கடன் வாங்குகின்றனர். சுய உதவி குழுக்கள் வாயிலாகவும் அதிகளவில் கடன்கள் பெறப்படுகின்றன.
முன்னர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் மட்டுமே கடன்கள் அதிகளவில் வழங்கப்பட்டன. இப்போது, பணக்கடன்கள் வழங்கும் நிறுவனங்கள் அதிகளவில் முளைத்து விட்டன. 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடன் தொகை வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
கவர்ச்சி சலுகை
இதற்காக கடன் பெறுவோரை கவரும் வகையில் கவர்ச்சி சலுகைகளும் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏஜன்சிகளால் அறிவிக்கப்படுகின்றன. இதை நம்பி கடன் வாங்கும் பொதுமக்கள், சுய உதவி குழுக்கள், சில நேரங்களில் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
அத்தகைய நேரங்களில், அடியாட்களை வைத்து மிரட்டுதல் போன்ற செயல்களில், தனியார் பணக்கடன் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. தேசிய வங்கிகளும், இதற்கென ஏஜன்சிகளை நியமித்து, பணம் வசூலிப்பு நடைமுறையில் கறாராக ஈடுபடுகின்றன.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளாவோர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய சட்டத்தை இயற்ற, தமிழக அரசு முன்வந்துள்ளது. இது தொடர்பான சட்ட மசோதாவை, சட்டசபையில் நேற்று, துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்தார்.
மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
பணக்கடன் வழங்குபவர்கள் மற்றும் அடகுகடைகாரர்களின் தொழிலை ஒழுங்குபடுத்தி, கடன் மீதான கடும் வட்டியில் இருந்து மக்களை காப்பதில், தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
கடந்த 1943ம் ஆண்டு தமிழக அடகு கடைக்காரர்கள் சட்டம், 1957ம் ஆண்டு தமிழக பணக்கடன் வழங்குபவர்கள் சட்டம், 2003ம் ஆண்டு தமிழக கந்துவட்டி விதித்தல் தடை சட்டம் ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது.
எனினும், சமீப காலமாக சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிந்த பிரிவினர், குறிப்பாக விவசாயிகள், மகளிர், சுயஉதவி குழுக்கள், விவசாய கூலி தொழிலாளர்கள், பணியாளர்கள்.
நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணை தொழிலாளர்கள், கட்டட பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர், பணக்கடன் வழங்கும் நிறுவனங்களால் அறிவிக்கப்படும் கவர்ச்சிகரமான கடன்களுக்கு அடிக்கடி இரையாகின்றனர். தாங்க இயலாத கடன் சுமைக்கு ஆட்படுகின்றனர்.
பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கனவே நிதி சுமையில் இருக்கும் கடன் பெற்றவர்களிடம் இருந்து, கடனை வசூலிப்பதற்கு முறையற்ற வழிகளை நாடுகின்றன.
அது துயரத்தில் இருக்கும் கடன் பெற்றவர்களை, சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு துாண்டுதலாய் அமைகிறது. அதன் வாயிலாக, பலரது குடும்பங்களை அழித்து, சமூக ஒழுங்கை பாதிப்படையச் செய்கிறது.
அவசியம்
எனவே, தனி நபர் அல்லது தனிநபர் குழுக்கள், சுய உதவி குழுக்கள் அல்லது கூட்டு பொறுப்பு குழுக்கள் ஆகியவற்றுக்கு, கடன் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் மிகுந்த இன்னல்களில் இருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்க, ஒரு சட்ட வரையறையை வகை செய்வது அவசியம்.
அதற்காக, பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் சட்டம் இயற்ற, அரசு முடிவு செய்வுள்ளது.
இந்த சட்டம், 2025ம் ஆண்டு தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் என அழைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சொத்துகளை
பறிக்க முடியாது
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்தில் செயல்படும் குறு நிதி நிறுவனங்கள், பணக்கடன் வழங்கும் ஏஜன்சிகள், பணக்கடன் வழங்கும் அமைப்புகள், தேசிய வங்கிகளின் ஏஜன்சிகளின் கட்டாய கடன் வசூல் நடைமுறைகள் தடுக்கப்படும்
கடன் பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மிரட்டவோ, சொத்துக்களை சட்ட விரோதமாக பறிக்கவோ முடியாது
கட்டாய கடன் வசூலில் ஈடுபடுபவர்களுக்கு, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
தற்கொலைக்கு துாண்டியதாக தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்படும். கடன் பெறுவோருக்கும், கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைப்பதற்கு தீர்ப்பாயத்தை அரசு அமைக்கும்
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பெருகியுள்ள அடகு கடை அடாவடிகளும் தடுக்கப்படும்.