பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 93,000 இடங்கள் காலி: வேலைவாய்ப்பு குறைவால் மாணவர்களிடம் ஆர்வம் சரிவு
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 93,000 இடங்கள் காலி: வேலைவாய்ப்பு குறைவால் மாணவர்களிடம் ஆர்வம் சரிவு
ADDED : ஆக 15, 2025 02:18 AM

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடப்பு கல்வியாண்டு, 93,000 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் மாணவர்கள் இடையே டிப்ளமா படிப்பு மீதான ஆர்வம் வெகுவாக குறைந்து வருகிறது. டிப்ளமா முடித்தவர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பின்மையே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த கல்வியாண்டில், மொத்தமுள்ள 1 லட்சத்து 43,499 இடங்களில், வெறும் 58,426 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதாவது மொத்த இடங்களில், வெறும் 40 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின; 85,073 இடங்கள் காலியாக இருந்தன.
இதன் எதிராலியாக, இந்த கல்வியாண்டில் 30 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் மூடப்பட்டன; 50 கல்லுாரிகள், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் பங்கேற்கவில்லை. அந்த வகையில், இந்த கல்வியாண்டில் 55 அரசு கல்லுாரிகள், 32 அரசு உதவி பெறும் கல்லுாரிகள், 321 தனியார் கல்லுாரிகள் மட்டுமே, முதலாம் ஆண்டில் மாணவர்களை சேர்த்துள்ளன.
இதற்கான கவுன்சிலிங், கல்லுாரிகளில் நேரடியாக நடந்து வருகிறது. கவுன்சிலிங் துவங்கி, இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 1 லட்சத்து 40,205 இடங்களில், இதுவரை 46,862 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; 93,343 இடங்கள் காலியாக உள்ளன.
காலியிடங்களை நிரப்ப, மாணவர்களுக்கு, அந்த கல்வியில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக, உயர் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
டிப்ளமா படிப்பின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம், தொழில் பயிற்சிகள் அறிமுகம் என, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது, பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அந்த மாணவர்களையும் டிப்ளமா படிப்புகளில் சேர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அனைத்து உயர் கல்வி படிப்புகளுக்கான முதல் கட்ட சேர்க்கை நிறைவு பெற்றவுடன், உயர் கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, இப்படிப்பில் உள்ள காலியிடங்களில் சேர்ப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -