மாமல்லை - காட்டுப்பள்ளி இடையே அமைகிறது... 10 வழிச்சாலை!
மாமல்லை - காட்டுப்பள்ளி இடையே அமைகிறது... 10 வழிச்சாலை!
UPDATED : செப் 10, 2024 05:41 AM
ADDED : செப் 10, 2024 12:14 AM

சென்னை : மாமல்லபுரம் - காட்டுப்பள்ளி துறைமுகம் இடையே, 10 வழிகளாக அமைக்கப்படும் சென்னை எல்லை சாலையின் இரண்டு கட்ட பணிகளை, ஜனவரி மாதம் முடித்து போக்குவரத்துக்கு திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கிண்டி கத்திப்பாரா - மணலி இடையே, 100 அடி சாலை, இரும்புலியூர் - புழல் இடையே சென்னை புறவழிச்சாலை, வண்டலுார் - மீஞ்சூர் இடையே, சென்னை வெளிவட்டச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், நாளுக்கு நாள், சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கார், டூ - வீலர்கள் உள்ளிட்ட வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. இதனால், மூன்று சாலைகளிலும் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில், இச்சாலைகள் வழியாக சொந்த ஊர்களுக்கு செல்வோர், பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு தீர்வு காணும் வகையில், மாமல்லபுரம் - மீஞ்சூர் இடையே, பெரிய வெளிவட்டச்சாலை அமைக்கப்படும் என, அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இத்திட்டத்திற்கு நிலம் எடுப்பு, நிதி ஒதுக்கீடு ஆகிய பணிகள் அரைகுறையாக செய்யப்பட்டு, கிடப்பில் போடப்பட்டன.
தற்போது, இச்சாலைக்கு சென்னை எல்லைச்சாலை என பெயர் மாற்றம்செய்யப்பட்டு உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி வரை திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இச்சாலை 196 அடி அகலமாக இருக்கும்.
அதன்படி, மாமல்லபுரம் பூச்சேரியில் துவங்கி, எண்ணுார் காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 132 கி.மீ.,க்கு இந்த சாலை, ஐந்து கட்டங்களாக அமைக்கப்பட உள்ளது.
இச்சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் போக்குவரத்து நெருக்கடியும், துாசு மாசுபாடு குறையும் என்பதால், எண்ணுார் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி மற்றும் எல் அண்டு டி தனியார் துறைமுகங்கள், இச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தன.
இதையடுத்து, பணிகளை துரிதப்படுத்த, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு மற்றும் தமிழக சாலை மேம்பாட்டு திட்ட உயர் அதிகாரிகள் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.
இதில் முதற்கட்ட பணி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை சார்பில், 2,673 கோடி ரூபாய் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, சாலை அமைப்பதற்கான பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தடுத்து நான்கு கட்டப் பணிகளும் நடக்கவுள்ளன.
அந்த வகையில், பணிகளை தொய்வின்றி மேற்கொண்டு, குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என, அமைச்சர் உதயநிதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, இரவு, பகலாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
தமிழக சாலை மேம்பாட்டு திட்ட உயர் அதிகாரிகள் கூறியதாவது:
இந்த 10 வழிச்சாலை அமைக்கப்பட்டால், கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு குறைந்த நேரத்தில் செல்ல முடியும்.
கிழக்கு கடற்கரை சாலை, சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு, சென்னை - திருப்பதி, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணைப்பாக, இந்த சாலை பயன்படும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழைக்குள், சாலை உயரத்தை அதிகரிப்பதற்கு மண் நிரப்பும் பணிகளை முடித்து, அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
எண்ணுார் முதல் தச்சூர் வரையிலான முதற்கட்ட பணிகள், தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரையிலான இரண்டாம் கட்ட பணிகளை, அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் முடித்து போக்குவரத்துக்கு திறக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை எல்லை சாலை விபரம்
சாலை மொத்த துாரம்: 132 கி.மீ.,
அகலம்: 196 அடி
பணி: 5 கட்டம்
1 மணி நேரத்திற்கு 50,000 ஆயிரம் வாகனங்கள் கடக்கும்
2:30 மணி நேரம் கடந்த நிலையில் 1 மணி நேரத்திற்குள் செல்லலாம்; மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் பயணிக்கலாம்
40 கி.மீ., துார இடைவெளியில் 5 சுங்கச்சாவடிகள்
* உள்ளூர் வாகனங்கள், சர்வீஸ் சாலை வழியாக இலவசமாக செல்லலாம்