இறுதியாக மூடிக்கொண்டது ஒரு வெள்ளித்திரை...!: 'டிலைட்' தியேட்டரின்... திரை 'மறைவு' ரகசியங்கள்
இறுதியாக மூடிக்கொண்டது ஒரு வெள்ளித்திரை...!: 'டிலைட்' தியேட்டரின்... திரை 'மறைவு' ரகசியங்கள்
ADDED : பிப் 09, 2024 11:29 AM

சினிமாவும், திரையரங்குகளும், நம் மக்களின் வாழ்வில், உணர்வில் பின்னிப் பிணைந்தவை. ஒவ்வொரு தியேட்டர் இடிக்கப்படும்போதும், மக்களின் பால்ய நினைவுகளும், சந்தோஷ நிகழ்வுகளின் பதிவுப்படிமங்களும் சப்தமின்றி நொறுக்கப்படுகின்றன. கோவையில் இப்படி பல தியேட்டர்கள், கல்யாண மண்டபங்களாக, ஷாப்பிங் மால்களாக உருமாறிவிட்டன.
கோவையில் தற்போது ஒரு தியேட்டரின் சுவர்களை இடிக்கும் சத்தம், பல லட்சம் பேருடைய இதயச்சுவர்களில் வேதனையாய் எதிரொலிக்கிறது. அதற்குக் காரணம், அந்த அரங்கத்தின் பழம்பெருமையும், பாரம்பரியமும், வசீகரமான வரலாறும் தான்!
வாருங்கள்... ஒரு 'பிளாஷ்பேக்'கிற்குள் நுழைவோம்...
முதல் முதலாக, இந்த ஊருக்கு மின்சார விளக்கை அறிமுகம் செய்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். ஆங்கிலேயர் காலத்தில், ரயில்வே ஒரு கம்பெனியாக இயங்கியது. அதில், டிராப்ட்ஸ்மேன் ஆகப் பணியாற்றியவர் இவர். திருச்சி ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கே ஒரு கொட்டகையில், 'பயாஸ்கோப்'புக்கும் முந்தைய காலத்து ஒரு கருவியில் படம் காட்டிக் கொண்டிருந்தார் ஆங்கிலேயர் டூபாண்ட்.
ஊர் ஊராக படம்
வின்சென்ட்டின் ஆங்கிலப்புலமை, டூபாண்ட்டுடன் அவருக்கு நட்பை ஏற்படுத்தியிருந்தது. திடீரென தன் நாட்டுக்குப் புறப்பட்ட டூபாண்ட், அந்த கருவியை விற்க முடிவு செய்தார். வின்சென்ட்டிடம் சொல்ல, இருந்த பணத்துடன், மனைவியின் நகையையும் விற்று, அந்த கருவியை வாங்கினார்.
அதை வைத்து, ரயிலில் நாடு முழுவதும் ஊர் ஊராகச் சென்று படம் காட்டினார். கோவையில் நிரந்தர அரங்குஒன்றை கட்டினார் சாமிக்கண்ணு. அதுதான், தென்னிந்தியாவின் முதல் நிரந்தர தியேட்டர், வெரைட்டி ஹால்.
அன்றைக்கு, ரயில்வே ஸ்டேஷன் முகப்பு இருந்தது, குட்ஷெட் ரோட்டில், எதிர்ரோட்டில் மிக அருகில் இந்த தியேட்டர் கட்டப்பட்ட ஆண்டு, 1914. கோவைக்கு பைக்காரா மின்சாரம் வந்ததே, 1930ல் தான். ஆனால் 1920க்கு முன்பே, ஜெனரேட்டர் வைத்து, தியேட்டரை ஓட்டினார் சாமிக்கண்ணு. தியேட்டருக்கு வெளியே வாசலில், ஒரு கம்பம் வைத்து மின்சார விளக்கை ஒளிர வைத்தார்.
வியாபார யுக்தி
கோவையின் நகரசபை தலைவராக இருந்த ரத்தினசபாபதி முதலியார், அதேபோல, நகரின் சில பகுதிகளிலும் தெரு விளக்குகளை அமைக்குமாறும், அதற்குரிய செலவு தொகையைத் தருவதாகவும் தெரிவித்தார். அதன் பின்பே, டவுன்ஹால் உட்பட சில பகுதிகளில், மின்சார விளக்குகள் எரிந்தன. அப்போது அந்த தியேட்டரில் பம்பாய், கல்கத்தாவில் தயாரான வசனம் இல்லாத படங்கள் தான் திரையிடப்பட்டன.
படம் ஓடும் போது, மேடையில் ஓரத்தில் இருந்து கொண்டு, ஒருவர் கை ஒலி பெருக்கியில் காட்சிகளை விளக்குவார். ஒரு படம் 10 ரீல் என்றால், இரண்டு இரண்டு ரீலாக ஐந்து நாட்கள் ஓட்டப்படும்; ஒரே ஆள் தினமும் வர வேண்டுமென்பதற்கான வியாபார யுக்தி அது. அதன்பின், சாமிக்கண்ணுவே, பம்பாய் சென்று படமெடுத்து தன் தியேட்டரிலேயே திரையிட்டார். அந்தப்படம் தான், வள்ளி திருமணம்.
தினம்... தினம்...
வெரைட்டி ஹால் தியேட்டர் உருவானதற்கு, 18 ஆண்டுகளுக்கு பின் தான், தென்னிந்தியாவில் ஸ்டூடியோக்களே உருவாயின. அதற்குப் பின் தான், டைமண்ட் டாக்கீஸ் வந்தது. வெரைட்டிஹாலையும், டைமண்ட் டாக்கீசையும், தங்கள் வாழ்விடங்களாகவே வைத்திருந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள், நம் கோவையின் முன்னோர்.
அந்த வெரைட்டி ஹால் தான், பின் 'டிலைட்' தியேட்டர் ஆனது; 2019ல் புதுப்பிக்கப்பட்டது. ஆனாலும், தியேட்டருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை; இப்போது தியேட்டர் இடிக்கப்படுகிறது. ஆனால், அந்த ரோட்டின் பெயர், தென்னிந்தியாவின் முதல் தியேட்டரை தினம் தினம் நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்!

