கூட்டத்துக்கு அனுமதி கிடைக்காமல் நிர்வாகிகள் தவிப்பு; விஜய் பாராமுகம்
கூட்டத்துக்கு அனுமதி கிடைக்காமல் நிர்வாகிகள் தவிப்பு; விஜய் பாராமுகம்
UPDATED : பிப் 08, 2026 08:43 AM
ADDED : பிப் 08, 2026 05:32 AM

- நமது நிருபர் -
த.வெ.க., நிகழ்ச்சிகளுக்கு, போலீஸ் அனுமதி கிடைக்காமல், கட்சி நிர்வாகிகள் தவித்து வரும் நிலையில், கட்சி தலைமை பாராமுகமாக இருப்பது, கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, த.வெ.க., மாவட்ட செயலர்கள் சிலர் கூறியதாவது: கரூர் துயர சம்பவத்துக்கு பின், த.வெ.க., நிகழ்ச்சிகளுக்கு, போலீசார் கடுமையான விதிமுறைகளை விதிக்கின்றனர். இதனால், கரூருக்கு பின், காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டத்தில் மட்டும், விஜய் பிரசாரம் நடத்த முடிந்தது. இன்று வேலுாருக்கு, முதல்வர் ஸ்டாலின் வருகிறார் எனக்கூறி, எங்கள் கட்சி கூட்டத்து க்கு, போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாட்டை செய்தும், பயனில்லாமல் போனது. அதேபோல், சேலம், சீலநாயக்கன்பட்டியில் 13ம் தேதி, விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு, போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் புதிய வழி காட்டு நெறிமுறைகளை காண்பித்து, ஏதேனும் ஒரு காரணத்தை கூறி, சேலம் போலீ சார் அனுமதி மறுக்கின்றனர். இதேபோல், தர்மபுரி, திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களிலும், கூட்டத்திற்கு அனுமதி கோரும், த.வெ.க., நிர்வாகிகளை, காவல்துறை அலைக்கழிக்கிறது.
இடத்தை முன்கூட்டியே, முன்பதிவு செய்வதால், கூட்டம் நடத்தாமலேயே, பல லட்சம் ரூபாய், வாடகையாக கொடுக்க வேண்டி உள்ளது. ஒரு கூட்டத்தை நடத்த, நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம், என, விஜய்க்கு, தெரியவில்லை. கூட்டம் நடத்த விடாமல், நெருக்கடி கொடுக்கும் அரசுக்கு எதிராக, விஜய் ஒரு 'ட்வீட்' போட்டால் போதும். அதைகூட விஜய் செய்யாதது, எங்களுக்கு வேதனையாக உள்ளது. இது குறித்து, அவரை சந்தித்து பேசவும் முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

