'ஏஐ' சிக்னல் திட்டம்!: திருப்பூரில் அமுல்படுத்தினால் சாத்தியமா?
'ஏஐ' சிக்னல் திட்டம்!: திருப்பூரில் அமுல்படுத்தினால் சாத்தியமா?
ADDED : ஜூலை 05, 2026 04:26 AM

திருப்பூர்: திருப்பூரில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி சிக்னல்களை அமைப்பதற்கு முன்பாக, வாகன ஓட்டுநர்களிடம் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. பின்னலாடைத் தொழிலுக்குத் தேவையான நூல், துணி மற்றும் ஆயத்த ஆடைகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் தொடர்ந்து நகருக்குள் இயக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அவிநாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் அதிவேகப் பயணமும், 'ஷிப்ட்' பணிக்குச் செல்லும் தொழிலாளர்களின் அவசரப் பயணமும் விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
சிக்னல் சவால்கள்
குறுகலான சாலைகள், சாலை ஓரங்களில் சரக்கு ஏற்றம், இறக்கம், போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாத வணிக வளாகங்கள், சாலையோர வாகன நிறுத்தம், பேருந்துகளை ஒழுங்கின்றி நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவது போன்றவை தானியங்கி சிக்னல் அமைப்புகளின் செயல்திறனுக்கு சவாலாக உள்ளன.
பரிந்துரைகள்
ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'அவிநாசி, பல்லடம், காங்கயம் சாலைகள் மற்றும் புஷ்பா தியேட்டர் சந்திப்பு போன்ற அகலமான, அதிக நெரிசல் உள்ள பகுதிகளில் முதற்கட்டமாக ஏஐ சிக்னல்களைச் சோதனை முறையில் செயல்படுத்தலாம். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை அகலப்படுத்துதல், பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், வாகன நிறுத்துமிடம் இல்லாத வணிகக் கட்டடங்களுக்கு அனுமதி வழங்காதது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம்' என்று தெரிவித்தனர்.
'சாலை பாதுகாப்புக் குழு' கூட்டங்களில் களத்தில் பணியாற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.க்களின் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு முடிவுகளை அமல்படுத்த வேண்டும். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் உள்ள திருப்பூரில், ஏஐ போக்குவரத்து மேலாண்மையை இணைப்பது எளிதாக இருக்கும் என்றும்,' அவர்கள் கூறினர்.
