முடங்கி கிடக்கும் அ.தி.மு.க., மா.செ.க்கள்: கடும் அதிருப்தியில் பழனிசாமி
முடங்கி கிடக்கும் அ.தி.மு.க., மா.செ.க்கள்: கடும் அதிருப்தியில் பழனிசாமி
ADDED : மார் 11, 2026 05:59 AM

- நமது நிருபர் -
'பூத் கமிட்டி' அமைக்கும் பணிகளை கூட முடிக்காமல், மாவட்டச்செயலர்கள் முடங்கி கிடப்பது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., அமைப்பு செயலர்கள் சிலர் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன்பே, 'பூத் கமிட்டி' அமைப்புக்கு பழனிசாமி முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், மாவட்டச் செயலர்கள், அப்பணியை முறையாக செய்யவில்லை. தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்காக, கடந்த ஜுன் மாதமே, பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிக்க உத்தரவிட்டார். கிளைக்கழகம் போல், ஒன்பது பேர் அடங்கிய, நிரந்தர பூத் கமிட்டி அமைக்க உத்தரவிடப்பட்டது.
ஒன்பது பேரில், இரண்டு இளைஞர்கள், மூன்று மகளிர் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்காக மாதம் ஒருமுறை மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை, பழனிசாமி ஆய்வு செய்தார். ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, திருச்சி, தஞ்சாவூர், கடலுார், நீலகிரி, திருப்பூர், கரூர், திருவண்ணாமலை, வேலுார், சென்னை என, 32 அமைப்பு மாவட்டங்களில், 60 சதவிகித பூத் கமிட்டி கூட அமைக்கப்படவில்லை.
அதேபோல் நகராட்சி, மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட, 'விடியா ஆட்சிக்கு; வீட்டு பில்லே சாட்சி' என்ற பிரசாரத்தில், தலா 2000 பேரை கூட சந்திக்காத, மாவட்டச்செயலர்களும் உள்ளனர். மகளிர் தினத்தன்று, துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ய, தலைமை இரண்டு பிரசுரங்களை, மாவட்டங்களுக்கு அனுப்பியது. பல மாவட்ட செயலர்கள், அவற்றை கண்டுகொள்ளவே இல்லை.
இந்த தகவல்கள் பழனிசாமிக்கு சொல்லப்பட, அவர் சம்பந்தப்பட்ட மாவட்டச்செயலர்களை அழைத்து கண்டித்துள்ளார். அதையும் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு பழனிசாமியும் ஒரு வ கையில் காரணம். லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், செயல்படாத மா.செ.க்களை மாற்றி விடலாம் என தலைமைக் கழக நிர்வாகிகள் வலியுறுத்தினோம்.
ஆனால், அவர்களை மாற்றினால், தனக்கு எதிராக திரும்பி விடுவர் என்ற பயத்தில், யார் மீதும் கை வைக்கவில்லை. அதன் விளைவைதான், தேர்தல் நெருக்கத்தில் சந்திக்கிறார். ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும் சூழலில், அடிப்படையிலேயே பிரச்னைகள் இருப்பதால், தற்போது கடும் அதிருப்தியில் பழனிசாமி இருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

