ADDED : ஜன 24, 2026 05:39 AM

''அ.தி.மு.க.,வின் சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் இன்னும் பரிசீலனையில் தான் உள்ளது,'' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் குறித்த பிரச்னை, ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி, டில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், தேர்தல் ஆணையத்தை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் தேர்வு ஆகிய விவகாரங்களில், கடந்த 2024ல் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
'அதை, தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. எனவே, ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரப்பட்டு இருந்தது.
இந்த நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, 'அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் குறித்த நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்?' என்று உரிய பதில் அளிக்க, தேர்தல் ஆணையத்துக்கு டில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு, தேர்தல் ஆணையம் தரப்பில் நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அ.தி.மு.க., சின்னம் ஒதுக்கீடு, கட்சியின் பெயர் மற்றும் கட்சிக் கொடியை பயன்படுத்துவது தொடர்பான விவகாரத்தில், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அ.தி.மு.க., வின் சின்னம் ஒதுக்கீடு, தலைமை மற்றும் அது தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து, பல்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை, பிப்., 16க்கு தள்ளி வைக்கப்பட்டது.
- டில்லி சிறப்பு நிருபர் -

