ஸ்டாலினிடம் அழகிரி ஆதரவாளர்கள் மன்னிப்பு கடிதம்: கட்சியில் சேர்க்கும்படி வேண்டுகோள்
ஸ்டாலினிடம் அழகிரி ஆதரவாளர்கள் மன்னிப்பு கடிதம்: கட்சியில் சேர்க்கும்படி வேண்டுகோள்
ADDED : டிச 13, 2024 07:16 AM

மதுரை: தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளர்கள் 9 பேர், மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம் அளித்துள்ளனர்.
மத்திய அமைச்சராக இருந்து தென்மாவட்ட தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அழகிரி, கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 2014ல் நீக்கப்பட்டார். அவருடன் அவருக்கு நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த அப்போதைய மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் அவைத்தலைவர் இசக்கிமுத்து, நகர துணை செயலர்கள் உதயகுமார், எம்.எல்.ராஜ், முன்னாள் மண்டல தலைவர் கோபிநாதன், தொண்டரணி முபாரக் மந்திரி உட்பட 15 நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர்.
தனிக்கட்சி
கருணாநிதி மறைவுக்குப் பின், ஸ்டாலினுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்து வந்த அழகிரி, தமிழகம் முழுதும் உள்ள அவருடைய ஆதரவாளர்களை சந்தித்தார். தனிக்கட்சி துவங்கப் போவதாகக்கூட தகவல் வெளியானது. ஆனால், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி, ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது போன்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் சமாதானம் ஆன அழகிரி, தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
மதுரை தி.மு.க.,வில் கோலோச்சிய அழகிரி ஆதரவாளர்கள் அனைவரும் 10 ஆண்டுகளாக எந்தக் கட்சிக்கும் செல்லாமல், அழகிரியுடனேயே உள்ளனர். இந்நிலையில் மன்னன், இசக்கிமுத்து உட்பட 9 பேர், தங்களை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கோரி, தற்போதைய மதுரை நகர் தி.மு.க., செயலர் தளபதி வாயிலாக கட்சி தலைமைக்கு மன்னிப்பு கடிதம் அளித்துள்ளனர்.
அந்த கடிதத்தில், 'கழகம், கருணாநிதி என்ற பிடிப்பில் தொடர்ந்து கட்சிக்காக உழைத்தோம். கட்சி அறிவித்த ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளோம். திருமங்கலம் இடைத்தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களிலும் கடுமையாக பாடுபட்டு, கட்சி வெற்றிக்கு உழைத்தோம்.எங்களை தாயுள்ளத்தோடு மன்னித்து மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி கட்சிக் கட்டுப்பாட்டை கடுகளவு கூட மீற மாட்டோம்' என தெரிவித்துள்ளனர்.
மனு தாக்கல்
மன்னிப்பு கோரி கடிதம் அளித்துள்ள இசக்கிமுத்து கூறியதாவது: நான் 1973 முதல் கட்சியில் உள்ளேன். வட்டச்செயலர் துவங்கி அவைத்தலைவர் வரை பல பொறுப்புகளில் இருந்துள்ளேன். 2014ல் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடந்தபோது, அழகிரி ஆதரவாளர்களான நாங்கள் மனு தாக்கல் செய்தோம். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் கோபமுற்ற அழகிரி, இவ்விஷயத்தை கருணாநிதியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போதைய அமைப்பு செயலரை அழைத்து கடுமையாக அவர் கண்டித்தார்.
பின் அழகிரி வெளிநாடு சென்றார். அந்த சூழ்நிலையில், சிலர் 'போட்டிப் பொதுக்குழு நடக்கும்' என போஸ்டர் ஒட்டினர்; அது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நீக்கப்பட்டோம். ஆனால், 10 ஆண்டுகளாக வேறு கட்சிக்கு செல்லவில்லை. மீண்டும் கட்சியில் சேர அழகிரியும் ஒப்புதல் அளித்து விட்டார். அதையடுத்தே, மன்னிப்பு கடிதம் அளித்துள்ளோம். இனி, ஸ்டாலினுக்கும் விசுவாசமாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

