அ.தி.மு.க.,வை அமித் ஷா கிள்ளுக்கீரையாக கருதுகிறார்: திருமாவளவன் சொல்கிறார்
அ.தி.மு.க.,வை அமித் ஷா கிள்ளுக்கீரையாக கருதுகிறார்: திருமாவளவன் சொல்கிறார்
ADDED : ஜூலை 14, 2025 01:46 AM

மேலுார்: “அ.தி.மு.க.,வை மத்திய அமைச்சர் அமித் ஷா கிள்ளுக்கீரையாக கருதுகிறார்,” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
மதுரை மாவட்டம் மேலுாரில், வி.சி., நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது:
பாதிக்கப்பட்ட மக்களுக்காக த.வெ.க., தலைவர் விஜய் நடத்தும் போராட்டம் அவசியமானது தான். ஆனால் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருந்தால், அது பாதிக்கப்பட்டவருக்கு பயன் தராது. தி.மு.க., அரசுக்கு எதிரான விமர்சனம் என்ற அடிப்படையில் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளை சிலர் கையில் எடுக்கின்றனர்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பற்றி நான் துவக்கத்தில் இருந்து சொல்வது, அது பொருந்தாத கூட்டணி என்பதுதான். கொள்கை அளவில் மட்டுமல்ல, செயல் அளவில் கூட இணக்கமாக செயல்பட முடியாத அளவுக்கு அவர்களுக்குள் இடைவெளி உள்ளது.
வெளியே நிற்கும் கட்சிகளை உள்ளே இழுக்க, கூட்டணி ஆட்சி என ஆசை காட்டுகின்றனர். அ.தி.மு.க., தமிழகத்தில் வலுவான கட்சி. ஆண்ட கட்சி. ஆனால் அந்தக் கட்சியின் விருப்பத்திற்கு மாறாக, மத்திய அமைச்சர் அமித் ஷா தன் விருப்பம் போல் கருத்துக்களை சொல்லி வருகிறார்.
அ.தி.மு.க., முன்னணி தலைவர்கள் ஒன்றுகூடி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
அ.தி.மு.க., தரப்பில் இருந்து கூட்டணி ஆட்சி என்று அறிவித்தால்தான் அது அதிகாரப்பூர்வமானதாக கருதப்படும். ஆனால் அமித் ஷா சொல்வதை பார்க்கும்போது, அ.தி.மு.க.,வை அவர் ஒரு கிள்ளுக்கீரையாக கருதுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.