விஜயை சந்தித்து பேச திட்டம் பனையூரில் தங்குகிறார் அமித் ஷா?
விஜயை சந்தித்து பேச திட்டம் பனையூரில் தங்குகிறார் அமித் ஷா?
ADDED : நவ 24, 2025 01:39 AM

சென்னை: கூட்டணிக்காக நடிகர் விஜயுடன் பேச்சு நடத்த ஏதுவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சென்னையை அடுத்த பனையூர் அருகில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்க பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர்.
தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறும் என, த.வெ.க., எதிர்பார்த்து காத்திருக்கிறது.
காங்கிரசில் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஒரு கோஷ்டி தலைவர்கள், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க விரும்புகின்றனர். பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் தலைமையில் மற்றொரு கோஷ்டி தலைவர்கள், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் த.வெ.க., இடம் பெறுவதை தடுக்கவும், அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., கூட்டணி அமைத்து, தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்புகிறார்.
பீஹார் தேர்தல் வெற்றி பாணியில், தமிழகத்திலும் வெற்றி பெற, அமித் ஷா சென்னைக்கு அடிக்கடி வர திட்டமிட்டுள்ளார்.
மெகா கூட்டணி, வெற்றி வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்க, சென்னை பனையூரில், குறிப்பாக, த.வெ.க., தலைவர் விஜய் கட்சியின் தலைமை அலுவலகம் அருகில் உள்ள ஹோட்டலில் அமித் ஷாவை தங்க வைக்க பா.ஜ.,வினர் முடிவுக்கு செய்துள்ளனர்.
அந்த ஹோட்டலில் தங்கியிருந்து, கூட்டணியை ஒருங்கிணைத்து, தேர்தல் பணிகளை கண்காணிக்க, அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக தமிழக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

