கூட்டணியில் இணைய 25 'சீட்' வேண்டும்: பாண்டாவிடம் வலியுறுத்திய அன்புமணி
கூட்டணியில் இணைய 25 'சீட்' வேண்டும்: பாண்டாவிடம் வலியுறுத்திய அன்புமணி
ADDED : அக் 20, 2025 01:32 AM

'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இணைய வேண்டும் என்றால், 25 சீட்கள் ஒதுக்க ஒப்புக் கொள்ள வேண்டும்' என, அக்கட்சியின் தலைவர் அன்புமணி நிபந்தனை விதித்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்திருக்கிறது. அக்கூட்டணியை ஏற்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்' என அறிவித்தார். ஆனால், அக்கூட்டணியில் எந்த கட்சியும் இதுவரை இணையவில்லை.
ஒன்றுபட வேண்டும்
இதனால், தமிழகத்தில் ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது பா.ஜ., கூட்டணியில் இருந்த பா.ம.க.,வை, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சியில் பா.ஜ., தேசிய தலைமை இறங்கி உள்ளது. இதற்காக, அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டாவை களம் இறக்கி விட்டுள்ளது.
இதையடுத்து, இரண்டாக பிளவுபட்டிருக்கும் பா.ம.க.,வின் ராமதாசையும், அன்புமணியையும் பாண்டா சந்தித்துள்ளார். இருவரிடமும் கூட்டணி குறித்து பேசிய பாண்டா, 'முதலில் இரண்டாக பிளவுபட்டிருக்கும் பா.ம.க., ஒன்றுபட வேண்டும்' என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
ஆனால், அதற்கு ராமதாஸ் ஒப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும், விடாமல் அன்புமணியை, சென்னையை அடுத்த அக்கரையில் உள்ள அவருடைய வீட்டுக்கே சென்று சந்தித்தார். அப்போது, பா.ம.க., ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தியதை ஏற்றுக்கொண்ட அன்புமணி, 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், தன் தலைமையிலான பா.ம.க.,வை இணைப்பதில் தனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை' என்று கூறிவிட்டு, 'கூட்டணியில் இணைய வேண்டும் என்றால், 25 சட்டசபை தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா எம்.பி., சீட்டையும் ஒதுக்க வேண்டும்' என நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.
வாய்ப்பில்லை
பா.ம.க., வட்டாரங்கள் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ம.க., வுக்கு 25 சீட்களை ஒதுக்க வேண்டும் என பாண்டாவிடம் அன்புமணி கோரியதும், 'அது குறித்து அ.தி.மு.க., பழனிசாமியிடம் பேசி ஒப்புதல் பெற்று விடலாம்.
ஆனால், ராஜ்ய சபா சீட்டை பொறுத்தவரை, பா.ஜ., தரப்பில் எந்தவித உறுதியும் அளிக்க முடியாது. ஏனென்றால், பா.ஜ.,வுக்கு தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்கள் இல்லை. ராஜ்யசபா சீட் தொடர்பாக பழனிசாமியிடம் தான் பேச வேண்டும். அவர் ஒப்புக் கொண்டால், பா.ஜ.,வுக்கு ஆட்சேபனை இல்லை' என பாண்டா கூறியிருக்கிறார்.
ஆனால், 'பா.ம.க., ஒன்றுபட வேண்டும்' என வலியுறுத்தி பாண்டா சொன்னபோது, அதை மறுக்காத அன்புமணி, 'இந்த விஷயத்தில் அப்பா ராமதாஸ் தான் முரண்டு பிடிப்பார்.
'அவரை சமாதானப்படுத்தினால், எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. 99 சதவீத பா.ம.க., தொண்டர்கள் மற்றும் பா.ம.க.,வுக்கு ஓட்டு போடக்கூடியோர் எங்கள் பக்கம் தான் உள்ளனர். ஒரு சதவீதம் பேர் தான், ராமதாஸ் பக்கம் உள்ளனர்.
'அதுவும், ராமதாசைப் போல சீனியர்கள். அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு வருவதே சிரமமான காரியம். ராமதாஸ் தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அவர், பா.ஜ., கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை' என்றும் சொல்லி இருக்கிறார். அதை கேட்டுக் கொண்ட பாண்டா, இன்னுமொரு முறை ராமதாசிடம் பேசி பார்ப்பதாகவும் சொல்லி சென்றுள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -