ஓசூர் விமான நிலையம் கனவு தகர்ப்பு பின்னணியில் ஆந்திர முதல்வர் நாயுடு? குப்பத்தில் புதிய ஏர்போர்ட் அமைக்கும் பணி துவக்கம்
ஓசூர் விமான நிலையம் கனவு தகர்ப்பு பின்னணியில் ஆந்திர முதல்வர் நாயுடு? குப்பத்தில் புதிய ஏர்போர்ட் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஜன 20, 2026 02:58 AM

ஓசூர்: ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு, ராணுவ அமைச்சகம் கைவிரித்துள்ள நிலையில், ஆந்திர மாநிலம், குப்பத்தில் விமான நிலையம் அமைவது உறுதியாகியுள்ளது. இதற்காக, 1,250 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு, முதல் கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
தமிழக - கர்நாடக எல்லை நகரான ஓசூரில் தொழில் வளர்ச்சியடையவும், மக்கள் பயன்பாட்டிற்கும் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க, 2021 டிசம்பரில் தமிழக தொழில் துறை மேம்பாட்டு கழகம், சாத்தியமான இடங்களை அடையாளம் காண, ஆலோசகர்களை அழைத்தது.
தொடர்ந்து, 2024 ஜூன் 27ல், சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'ஆண்டுக்கு 30 மில்லியன் பயணியரை கையாளும் வகையில், ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக் கப்படும்' என அறிவித்தார்.
நிராகரிப்பு
ஆனால், ஓசூரில் இருந்து பெங்களூரு கெம்பே கவுடா பன்னாட்டு விமான நிலையம் 75 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. அந்த விமான நிலையம், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இடையே, 2008ல் ஒப்பந்தம் போடப்பட்டது.
அதில், 'பெங்களூரு விமான நிலையத்தை சுற்றி, 150 கி.மீ., துாரத்திற்கு, எந்த விமான நிலையமும் அமைக்கக்கூடாது' என்ற விதி உள்ளது. இது, வரும் 2033 வரை அமலில் இருக்கும்.
ஓசூர் விமான நிலையம் அமையும் இடம், கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து துாரம் குறைவாக இருப்பினும், அனுமதி பெற்று பணிகளை துவக்கி, 2033க்கு பின் ஓசூரில் விமான நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டது.
விமான நிலையத்திற்கு வான்வெளி அனுமதி கோரி, தமிழக அரசு, ராணுவ அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது. ஆனால், 'ஓசூரை சுற்றியுள்ள வான் பகுதியில், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல்' நிறுவனம் இயங்குகிறது.
'இங்கு, ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சோதனை செய்யப்படுகின்றன. இந்த வான்வெளியில் பயணியர் விமான நிலையம் அமைந்தால், பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும்' என்ற காரணத்தை கூறி, ஓசூரில் விமான நிலையம் அமைக்க ராணுவ அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
காய் நகர்த்தும் ஆந்திரா
ஆனால், ஆந்திர மாநிலம், குப்பம் பகுதி ராமகுப்பம் மண்டலம், விஜிலாபுரத்தில், 2019 ஜன., 3ல், 430 ஏக்கர் பரப்பில் விமான நிலையம் அமைக்க, அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.
அதன் பின் நடந்த தேர்தலில், ஆட்சி மாற்றத்தால் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், 2024 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, சந்திரபாபு நாயுடு மீண்டும் அம்மாநில முதல்வராகிஉள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம்மோகன் நாயுடு, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்.
சமீபத்தில் சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில், 'ஆந்திர மாநிலத்திலிருந்து சர்வதேச விமானங்கள் அதிகளவில் செல்லும் வகையில், மாநிலத்தில் விமான நிலையங்கள் அதிகரிக்கப்படும்' என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் புதிதாக ஏழு விமான நிலையங்கள் அமைக்க, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி செய்து வருகிறார். அதற்காக, விமான உட்கட்டமைப்பின் விரிவாக்கம் மற்றும் மேம்பாடு குறித்து, உயர்மட்ட ஆய்வு கூட்டத்தை சமீபத்தில் நடத்தியுள்ளார்.
இக்கூட்டத்தில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு, இந்திய விமான நிலைய ஆணைய மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், குப்பம், தகதர்த்தி, ஸ்ரீகாகுளம், தடேபள்ளிகுடேம், நாகார்ஜுன சாகர், துனி -அண்ணாவரம் மற்றும் ஓங்கோல் ஆகிய ஏழு இடங்களில், புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பணி துவக்கம்
இந்நிலையில், ஆந்திர அரசு, குப்பம் விமான நிலைய பணியை துவக்கி உள்ளது. இப்பணி வரும் 2027ல் நிறைவடையும் என அறிவித்துள்ளது. குப்பம் விமான நிலைய திட்டத்திற்காக, 1,250 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியிலிருந்து, ஆந்திர மாநிலம் குப்பம், 36 கி.மீ., தொலைவில் தான் உள்ளது. அதுவே, ஓசூரிலிருந்து 90 கி.மீ., துாரத்தில் உள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், குப்பம் விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற வாதத்தை ஆந்திர அரசு முன்வைக்கிறது.
ஓசூரிலிருந்து, கர்நாடகா மாநிலம், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், 75 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. பெங்களூரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, விமான நிலையத்திற்கு செல்ல மூன்று மணி நேரம் ஆகிறது.
ஆனால், ஆந்திராவின் குப்பத்திற்கு செல்ல வேண்டுமென்றால், விரைவாக செல்லும் வகையில் சாலை வசதி உள்ளது. அதனால், குப்பத்தில் விமான நிலையம் அமையும் பட்சத்தில், ஓசூரில் விமான நிலையம் வருவது சந்தேகமே.
ஆந்திர மாநிலம், குப்பத்தில் விமான நிலையம் அமைக்கத்தான், ஓசூருக்கு அனுமதி வழங்காமல், ராணுவ அமைச்சகம் கைவிரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்முனைவோர் கருத்து
விமான போக்குவரத்து தேவை
வி.ஞானசேகரன், 59, தமிழ்நாடு குறு, சிறு சங்க செயற்குழு உறுப்பினர் (டான்ஸ்டியா): தொழில் துறைக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கும்போது தான், பொருளாதாரம், வேலைவாய்ப்பு பெருகும்; வரி வருவாய் அதிகரிக்கும். வளர்ந்த ஓசூருக்கு அத்தியாவசியமாக விமான போக்குவரத்து தேவை. ஏற்றுமதிக்கு சிறந்தது விமானம் தான். மத்திய அரசு இப்போது அனுமதி கொடுத்தாலே, ஓசூரில் விமான நிலையம் அமைந்து, அது செயல்பாட்டிற்கு வர ஐந்து ஆண்டுகள் ஆகும். பொருளாதார வளர்ச்சிக்காக விதிகளை தளர்த்தி, உடனே அனுமதி வழங்க வேண்டும்.
விதிகளை தளர்த்த வேண்டும்
எஸ்.மூர்த்தி, 59, ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் (ஹோஸ்டியா) சங்க தலைவர்: மத்திய அரசு, தொழில்நுட்ப ரீதியில் ஓசூரில் விமான நிலையம் அமைக்க சாத்தியமில்லை என கூறியுள்ளது. கர்நாடகாவின் தேவனஹள்ளியில், கடந்த 2008ம் ஆண்டு வரை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவன இடத்தில் தான் விமான நிலையம் செயல்பட்டது. எனவே, தொழில்நுட்ப ரீதியில் உள்ள விதிகளை தளர்த்தி, ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாமல் விமான நிலையம் அமைக்க வேண்டும்.
3 மணி நேர பயணம்
கே.வேல்முருகன், 50, ஓசூர் தொழில் வர்த்தக சபை தலைவர்: பாதுகாப்பு அமைச்சகம் நியாயமான காரணத்தைக் கூறி, ஓசூர் விமான நிலையம் அமைய அனுமதி மறுத்துள்ளது. ஓசூருக்கு விமான நிலையம் அத்தியாவசிய ஒன்றாக உள்ளது. பெங்களூரு சென்று தான், சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், ஓசூரிலிருந்து பெங்களூரு செல்லவே மூன்று மணி நேரமாகிறது. அதனால், மத்திய - மாநில அரசுகள் பேசி, விதிகளை தளர்த்தி, ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.
ஏமாற்றம் அளிக்கிறது
எம்.முருகேசன், 53, ஓசூர் மைக்ரோ இண்டஸ்டிரியல் அசோசியேஷன் (ஹோஸ்மியா) தலைவர்: ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சகம் கைவிரித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. ஏற்றுமதிக்காக பொருட்களை பெங்களூரு கொண்டு செல்ல சிரமமாக உள்ளது. மத்திய அரசு பரிசீலனை செய்து, ஓசூருக்கு விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.

