தேர்தல் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகல்; பா.ஜ., மற்றும் தே.ஜ., கூட்டணியில் சலசலப்பு
தேர்தல் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகல்; பா.ஜ., மற்றும் தே.ஜ., கூட்டணியில் சலசலப்பு
UPDATED : பிப் 04, 2026 04:01 PM
ADDED : பிப் 04, 2026 05:40 AM

சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி, ஆறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக, கட்சி தலைமை நியமித்த தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் அறிவித்தது, பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது.
சுற்றுப்பயணம்
இந்த தேர்தலில், 30 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ள பா.ஜ., இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெற வியூகங்களை வகுத்து வருகிறது. எனவே, 234 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ., தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணிக்கு, முக்கிய தலைவர்கள் சுற்றுப்பயணம் அனுப்பப்பட உள்ளனர்.
இதற்காக, இரு தொகுதிகள் முதல் ஏழு தொகுதிகளுக்கு தலா ஒரு பொறுப்பாளர் என, 72 பொறுப்பாளர்களை, தமிழக பா.ஜ,, தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் நியமித்தார்.
இதில், மத்திய அமைச்சர் முருகன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை, மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் இருந்தனர். விருகம்பாக்கம் , சிங்காநல்லுார், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய ஆறு தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
ஒவ்வொரு பொறுப்பாளரும், தொகுதியில் சுற்றுப்பயணம் செல்லும் போது, இரு தினங்கள் அங்கு தங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலைக்கு, பா.ஜ.,வை தாண்டி ஹிந்து அமைப்புகள், இளைஞர்கள், பெண்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. அவரின் பிரசாரம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கும் என, பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது; அவரை கவனிக்க வேண்டிய கடமை உள்ளது; அதனால், ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக, அண்ணாமலை நேற்று தெரிவித்தார்.
பேசுபொருள்
இந்த தகவலை நயினார் நாகேந்திரனிடம் கூறியிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். அண்ணாமலையின் திடீர் விலகல் பா.ஜ., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துவிட்ட நிலையில், அந்த தகவலை ஏன் அண்ணாமலை பொதுவெளியில் தெரிவித்தார் என்பது கட்சிக்குள்ளும், கூட்டணி கட்சிகள் இடையேயும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தில் அண்ணாமலை இருந்தார். அவரை ஆறு தொகுதிகளுக்குள் முடக்கியதால், விலகல் அறிவிப்பை வெளியிட்டு விட்டார். ஆனால், இந்த விஷயத்தை தி.மு.க.,வினர் தங்களுக்கு சாதகமாக்கி, கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை செயல்படுவது போல் பொதுவெளியில் கருத்துக்களை பரப்புகின்றனர்.
அதிருப்தி
அண்ணாமலை மட்டுமின்றி, பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை நியமிப்பதற்கு முன், கட்சி தலைமை அவர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை. மேலும், தொகுதிகளின் பொறுப்பாளர்களை நியமிக்கும் போது, ஒரு தொகுதிக்கு அருகில் உள்ள தொகுதிகளை சேர்த்து, பொறுப்பாளரை நியமிக்க வேண்டும். ஆனால், சென்னையில் ஒரு தொகுதி, தென் மாவட்டத்தில் ஒரு தொகுதி என, சம்பந்தமே இல்லாமல் தொகுதிகளை ஒதுக்கியதும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை விலகல் மற்றும் எச்.ராஜா உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை மாற்றி அமைக்கக்கூடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

